லேசான சாரல்.. இதமான காற்று.. குவியும் அரிய வகை பழங்கள்.. குஷியில் சுற்றுலா பயணிகள்!
தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் விளையும் விதவிதமான அரியவகை பழங்கள் குற்றாலத்தில் உள்ள பழக்கடைகளில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசன் காலமாகும். சீசனின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் வந்து அருவிகளில் குளித்து மகிழ்வர்.

குடும்பத்தினருடன் சுற்றுலா வரும் பயணிகள் அனைத்து அருவிகளிலும் குளித்து முடித்தவுடன் குற்றாலம், ஐந்தருவி பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் அரிய வகை பழங்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள்.
தற்போது குற்றாலத்தில் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட அரிய வகை பழங்களான மங்குஸ்தான், ரம்டான், துரியன், முட்டைப்பழம், மனோரஞ்சிதம் பழம் போன்ற பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல், குற்றாலம் போன்ற மலைப்பகுதிகளில் மட்டுமே மங்குஸ்தான், ரம்டான் பழங்கள் விளைகின்றன.
ரம்டான் ரூ.170 லிருந்து ரூ 300 வரையிலும், மங்குஸ்தான் ரூ.150 முதல் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் இந்த பழங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மொத்த வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.குற்றாலத்தில் சீசன் களைகட்டவில்லை என்றாலும் அரியவகை பழங்களின் வரத்து சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications