காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரத்துக்கு வரவழைக்கப்பட்ட மருந்துகள்
கருணாநிதி சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரத்துக்கு மருந்து பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சிகிச்சைக்காக மருத்துவக் குழுவினர் காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரத்துக்கு மருந்துகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக முதுமை காரணமாக அவருடைய கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்துவருகிறார். அவ்வப்போது சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், கருணாநிதிக்கு உணவுக் குழாய் மாற்றும் சிகிச்சை நடைபெற்றது. பின்னர், வீட்டுக்கு வந்த கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு சிறுநீர் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவமனையில் அளிக்கக் கூடிய சிகிச்சை அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கருணாநிதியின் சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனையிலிருந்து மருத்துவக் குழுவினர் இன்று மதியம் வாகனத்தில் மருந்துப் பொருட்களையும் மருத்துவ உபகரணங்களையும் கொண்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்து திமுக தலைவரின் உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
கருணாநிதிக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications