தங்க நாற்கர சாலை திட்டத்தின் முக்கிய பங்காளரான சி.என்.ராமதாஸ் மரணம்.. 7 முதல்வர்களிடம் பணியாற்றியவர்
சென்னை: தமிழகத்தில் பல முக்கிய அடிப்படைக் கட்டமைப்புகளுக்கு வித்திட்டவரான சி.என்.ராமதாஸ் மரணமடைந்தார்.
மத்திய அரசின் தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னாள் செயலாளராக இருந்தவர் சி.என். ராம்தாஸ். சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அவரது பணிவாழ்க்கையில் பெரும்பாலான காலத்தை தமிழ்நாட்டில் செலவிட்ட அவர், மத்திய அரசு பணிக்கு மாறுதலாகி போவதற்கு முன்பு தகவல் தொடர்பு துறை, கல்வி, வருவாய், நகராட்சி நிர்வாகம் போன்ற பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார். தமிழகத்தில் ஏழு முதல்வர்களின் கீழ் பணியாற்றிய தனித்துவச் சிறப்பு இவருக்கு உண்டு.
டெல்லியில் தரைவழிப் போக்குவரத்து துறையின் செயலராக பணியாற்றியபோது, இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை
அறிமுகம்செய்து செயல்படுத்திய குழுவின் ஓர் அங்கமாக இருந்தார். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை மீண்டும் தொடங்கிய இவர் இந்தியாவெங்கும் தங்க நாற்கர நெடுஞ்சாலை செயல்திட்டத்தை முன்னின்று செயல்படுத்தினார்.
தமிழ்நாட்டில் எண்ணூர் துறைமுகத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியதன்மூலம் இந்தியாவில் 3 பெரிய துறைமுகங்களைக் கொண்ட ஒரே
மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திய பெருமை இவருக்குரியது. சென்னையில் அழகான கிழக்கு கடற்கரை சாலை திட்டம் உட்பட முக்கியமான சாலையமைப்பு செயல்திட்டங்களுக்கு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து கடன்களையும் இவர் பெற்று தந்தார்.
தமிழகத்தில் பணியாற்றிய காலத்தின்போது, இலங்கை அகதிகளுக்கு மறுவாழ்வு வழங்கியது, பேரிடர் மேலாண்மை திட்டம், 1980-களின் ஆரம்பத்தில் சென்னையில் சோடிய ஆவி விளக்குகளை அறிமுகம் செய்ததன்வழியாக நாட்டின் எஞ்சிய பகுதி அனைத்திற்கும் ஒரு முன்மாதிரியாக சென்னை மாநகரை ஆக்கியதற்கு ராம்தாஸ் அவர்களே பொறுப்பாவார். தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்துறை பிரிவுகளை சீர்திருத்தி புத்துயிர் அளித்ததற்காக பல விருதுகளை பெற்ற இவர், சிறந்த உற்பத்தி திறனுக்காக கௌரவமிக்க குடியரசு தலைவரின் விருதையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மகன் கிருஷ், மெகஸ்டர் டிஜிட்டல் இதழ் இணை நிறுவனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார்.