வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை... 2 ஆண்டுகளுக்கு பிறகு 95 அடியை எட்டியது நீர்மட்டம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு 95 அடியை எட்டியது.
சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு, 95 அடி எட்டியுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கபிணி அணை நிரம்பியுள்ளதால் தண்ணீர் திறப்பு அதிகரித்தது.
காவிரியில் திறந்து விடப்படும் உபரிநீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருவது அதிகரித்தது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மிதமான மழையால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு 95 அடியை எட்டியது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 21,991 கன அடியில் இருந்து 23,871 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 95.47 கன அடியும், நீர் இருப்பு 59.128 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 15,000 கன அடியாக உள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.