80 அடியை எட்டிய மேட்டூர் அணை... சம்பா சாகுபடிக்கு நீர் திறப்பது எப்போது?
மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சாகுபடிக்காக அணை திறக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் சம்பா சாகுபடிக்கு நீர் திறக்கப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கபிணி அணை நிரம்பியுள்ளதால் தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது.
காவிரியில் திறந்து விடப்படும் உபரிநீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருவது அதிகரித்துள்ளது.
80 அடியை எட்டிய மேட்டூர் அணை
கடந்த 2 நாள்களில் அணையின் நீர் மட்டம் 2 அடியாக உயர்ந்துள்ளது. ஓராண்டுக்கு பின்னர் 80 அடியை எட்டியுள்ளது அணை. வினாடிக்கு அணைக்கு 12,902 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக அணையிலிருந்து வினாடிக்கு 2000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணை நீர் மட்டம்
அணையின் நீர் 80.19 அடியாகவும், நீர் இருப்பு 42.14 டிஎம்சியாகவும் உள்ளது. அணையின் நீர் மட்டம் விரைவில் 90 அடியை எட்டும்போது பாசனத்துக்கு திறந்து விடப்படும்.
விவசாயிகள் மகிழ்ச்சி
நீர் வரத்தும், நீர் மட்டமும் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓரிரு நாள்களில் அணை திறக்கப்படும் என்று தெரிகிறது.
தண்ணீர் திறக்க கோரிக்கை
குறுவை சாகுபடி பொய்த்துவிட்ட நிலையில் சம்பா சாகுபடிக்காவது தண்ணீரை விரைவில் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.