காவிரி நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணை நிரம்புவதில் சிக்கல்!
பென்னாகரம்: காவிரியில் நீர்வரத்து பாதியாக குறைந்து வருவதால் மேட்டூர் அணை நிரம்புமா, இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தென்மேற்கு பருவமழையானது கர்நாடகாவில் தீவிரம் அடைந்து வருகின்றது.
இதனால் கர்நாடகாவின் எல்லா அணைகளும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

ஒகேனக்கல்லுக்கு தண்ணீர்:
இதன் காரணமாக கடந்த 17 ஆம் தேதி முதல் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்தொடங்கியது. 18 ஆம் தேதி அதிகாலை முதல் மேட்டூர் அணைக்கும் வரத்தொடங்கியது.

குறையும் பருவ மழை:
இந்த நிலையில் குடகு, தலைக்காவிரி, மடிக்கேரி ஆகிய காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்து வந்த பருவ மழை தற்போது குறைய தொடங்கி இருக்கிறது. இதனால் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது

நீர்வரத்தும் குறைந்தது:
மழையின் தாக்கம் குறைந்து விட்டதால் நீர்வரத்தும் குறைந்து விட்டது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் பாதியாக குறைந்து விட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவும் படிபடியாக குறைந்து வருகிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம்:
இந்நிலையில், இதுவரை நாள் ஒன்றுக்கு 3 அடிவரை உயர்ந்து வந்த மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்ததால் நேற்று ஒரு அடி மட்டுமே உயர்ந்தது.

வெளியேற்றப்படும் தண்ணீர்:
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 81.21 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 87 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நிரம்புவதில் சிக்கல்:
நீர்வரத்தின் காரணமாக வேகமாக நிரம்பி வந்த மேட்டூர் அணை தற்போது நீர்வரத்து குறைய தொடங்கியதால் மெதுவாக உயர்ந்து வருகிறது.

காவிரியில் நீர்வரத்து:
இதனால் மேட்டூர் அணை நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்தால்தான் மேட்டூர் அணை நிரம்பும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications