எம் ஜி ஆர் 29வது ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா இல்லாத முதல் நினைவஞ்சலி- ஓபிஎஸ் மரியாதை
மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் திரளாக வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: அதிமுக வை உருவாக்கிய தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 29வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா இதே நாளில் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு வந்த போது வரலாறு காணாத கூட்டம் கூடியது. சட்டசபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நல்லாசியோடு கழக நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து நல்லாட்சி அமைந்திட முழு அர்ப்பணிப்போடு களப்பணியாற்றுவோம் என்று இந்நாளில் உளமாற உறுதி ஏற்கிறோம் என்று ஓ.பன்னீர் செல்வம் வாசிக்க அதனை அமைச்சர்களும், அதிமுகவினரும் உணர்ச்சி பொங்க திரும்ப கூறினர். அதே போல அதிமுக ஆட்சி அமைந்தது. ஆனால் ஆட்சி அமைந்து 6 மாதத்திற்கு உள்ளாகவே முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவினால் டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் 29 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதா இல்லாத நிலையில், மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் திரளாக வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திலும் முதல்வர் ஓபிஎஸ், அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.