கீதாலட்சுமியிடம் 7 மணி நேரமாக கிடுக்குப்பிடி விசாரணை... விஜயபாஸ்கர் குறித்த கேள்விகளால் திணறல்
ஹைகோர்ட் கண்டனத்துக்கு பிறகு வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஆஜரான கீதாலட்சுமியிடம் 7 மணி நேரத்துக்கு மேலாக விசாரண நடைபெற்றது.
சென்னை: வருமான வரித் துறை அதிகாரிகள் முன்பு ஆஜரான எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமியிடம் 7 நேரமாக அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோரது வீடுகளில் வருமான வரி் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது முக்கிய ஆவணங்களும், ரூ.89 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த மேற்கண்ட மூவருடன் சேர்த்து முன்னாள் எம்.பி. ராஜேந்திரனுக்கும் சென்னை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

விஜயபாஸ்கர் ஒப்புதல்
சரத்குமார், விஜயபாஸ்கர், ராஜேந்திரன் ஆகிய மூவரும் திங்கள்கிழமை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் ஆஜராகினர். அப்போது அவர்களிடம் தனித்தனியாக 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாட செய்தது தொடர்பாக விஜயபாஸ்கர் ஒப்புக் கொண்டார். இந்நிலையில் அவரிடம் துறை ரீதியான விசாரணையும் நடைபெற்றது.

சரத்குமாரிடம் விசாரணை
சரத்குமாரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் நேற்று அவரது மனைவியும் நடிகையுமான ராதிகாவின் ராடன் நிறுவனத்தில் சோதனை நடத்தியது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகினர்.

டிமிக்கி கொடுக்க முயன்ற கீதா லட்சுமி
எனினும் வருமான வரித்துறையினரிடம் ஆஜராகாமல் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனில் இருந்து விலக்கு கோரி உய்ரநீதிமன்றத்தில் ரிட் மனுவை கீதாலட்சுமி தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அரசு அதிகாரி என்றால், வருமான வரித்துறையினரின் விசாரணைக்கு அப்பாற்பட்டவர் என்பது சட்டமில்லை என்று கூறி அவரை கண்டித்ததோடு அவரது மனுவை தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் முன்பு இன்று கீதா லட்சுமி ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது.

விஜயபாஸ்கர் பற்றிய கேள்விகள்
விஜயபாஸ்கர் பற்றிய கேள்விகளே கீதா லட்சுமியிடம் அதிகமாக கேட்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் கீதா லட்சுமிக்கும், விஜயபாஸ்கருக்கும் துறை ரீதியாக உள்ள தொடர்பு குறித்தும் கேட்கப்பட்டது. எனினும் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் ஆகிய மருத்துவக் கல்லூரிகளின் டீனாக இருந்தபோதும் ஏதேனும் முறைகேட்டில் கீதா லட்சுமி சிக்கியுள்ளாரா? விஜயபாஸ்கருடன் சேர்ந்து என்னென்ன முறைகேடுகளில் ஈடுபட்டார், அவரிடம் என்ன சலுகைகளை பெற்றார் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ கம்பெனியில் சோதனை
இதனிடையே மருந்துகள் கொள்முதல் முறைகேடு செய்ததாக கீதாலட்சுமியிடம் விசாரணை நடத்தும் அதேநேரத்தில் 3 மருந்து கம்பெனிகளிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications