சசி போஸ்டரை கிழித்தவரை நடு ரோட்டில் வைத்து சரமாரியாக அடித்த ராஜேந்திரபாலாஜி.. மக்கள் பேரதிர்ச்சி!
சென்னை கிரீன் வேஸ் சாலையில் ஒட்டிய இருந்த சசிகலாவின் போஸ்டர்களை கிழந்தவரை தடுத்து நிறுத்தினார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அவரை “ நீ தீபா ஆதரவாளரா” என்று அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தார் அமைச்சர்.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதால், கிரீன்வேஸ் சாலையில் அதிமுக பொதுச் செயலாளார் சசிகலாவை வாழ்த்தி அதிக அளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களை கிழித்த ஒருவரை மடக்கி அடியோ அடி என்று அடித்து போலீசில் ஒப்படைத்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள கிரீன் வேஸ் சாலையில் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர் அனைவரின் வீடுகளும் அங்குள்ளன. இந்த சாலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களை அதிமுக கரை வேட்டி கட்டிய நபர் ஒருவர் கிழித்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரை அடித்து உதைத்து மிரட்டினார்.
பின்னர், தனியாக இருந்த அந்த நபரை தள்ளிக் கொண்டு போய் தலை, கழுத்து, முகம் என்று பளார் பளார் என்று அறைந்தார். " நீ யாருடா, தீபா ஆதரவாளரா, நாயே.. சின்னம்மாவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு அடி அடி என்று அடிக்கிறார். போதாதக்குறைக்கு அவருடன் வந்த கட்சிக்காரர்களும் போஸ்டர் கிழிந்த நபரை ஆளாக்கு அடித்து உதைத்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் அந்தப் பகுதிக்கு வந்தனர். அவர்களிடம் போஸ்டரை கிழித்த நபரை அமைச்சர் ஒப்படைத்தார். இந்த சம்பவத்தின் போது அந்தப் பக்கமாக வந்த யாரோ, அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இந்த நடவடிக்கையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.