அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை 3 நாட்களில் கொன்றுவிடுவோம்: எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல்
சேலம்: அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சேலம் ஆர்.டி.ஓ.வாக இருப்பவர் லீலாவதி. கடந்த 13ம் தேதி அவரது செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்ஸில் மாவட்ட கலெக்டரை 5 நாட்களுக்குள் கொலை செய்துவிடுவோம் முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் சேலம் தாசில்தாராக உள்ள கண்ணனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்ஸில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை நீதிபதி ஆகியோரை இன்னும் 3 நாட்களில் கொலை செய்யப் போகிறோம். இப்படிக்கு கார்த்திக் என்று இருந்தது. பெயருக்கு அருகில் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் எஸ்.எம்.எஸ்.கள் வந்த எண்களை வைத்து விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சேலம் துணை கமிஷனர் பாபு தலைமையிலான தனிப்படை எஸ்.எம்.எஸ்ஸில் குறிப்பிட்ட எண்ணை வைத்து விசாரித்ததில் அந்த எண்ணின் உரிமையாளரான கார்த்திக் சேலம் அருகே உள்ள இரும்பாலையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோது அவர் இதற்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துவிட்டார். ஆனால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்ட சிம்கார்டு தர்மபுரியில் வாங்கப்பட்டதை அறிந்து போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் யாரோ தர்மபுரி டவுன் பகுதியில் சிம்கார்டு வாங்கி எஸ்.எம்.எஸ். அனுப்பியது தெரிய வந்தது. யாரோ சிம்கார்டு வாங்கி எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு அதை தூக்கி எறிந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இந்த கொலை மிரட்டலை அடுத்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.