அரசு டாக்டருக்கு விஜயபாஸ்கர் ரூ.5 லட்சம் லஞ்சம்.. ஜெ. கைரேகை உண்மைதானா? ஸ்டாலின் பரபர கேள்வி
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது இறுதி 75 நாட்களில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அந்நாட்களில் நடைபெற்ற தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களுக்குரிய பி படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது.
ஜெயலலிதாவிடம் அந்த கை ரேகையை வாங்கித்தந்த மருத்துவர் பாலாஜி என்பவருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 35 இடங்களில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின.
இதில், ஜெயலலிதாவின் கைநாட்டு பெற்ற மருத்துவர் பாலாஜிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டதற்கான ஆதாரமும் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: அதிமுகவில் ஒன்றாக இருந்து கொள்ளையடித்தவர்கள் இன்றைக்கு அந்த கட்சி யாருக்கு, சின்னம் யாருக்கு, ஆட்சியில் அடிக்கும் கொள்ளை யாருக்கு என்ற போட்டியில் இந்த தேர்தலில் இருக்கிறார்களே தவிர, மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை.

வெட்கக்கேடு
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு 22 மணி நேரம் நடந்து பல ஆவணங்கள் கிடைத்துள்ளன. இது மரபல்ல, மரபு மீறப்பட்டுள்ளது. இதேபோல, தலைமைச்செயலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டதும் வெட்கத்துக்கு உரியது.. அதே நேரத்தில் பல ஆவணங்கள் இதில் சிக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த ஆவணங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட 7 அமைச்சர்கள், ஜெயகுமார், வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனுவாசன் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க எவ்வளவு பணம் வழங்கப்பட்டு இருக்கிறது என்ற விவரங்கள் இருக்கின்றன.

வசூல் விவரம்
அதாவது, 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு வழங்கி ஏமாற்றி, திட்டமிட்டு வாக்காளர்களை ஏமாற்ற பணம் கொடுக்கப்பட்டு இருப்பது வெளியாகி உள்ளது. இந்த விவரங்கள் எல்லாம், விஜயபாஸ்கரின் வீடு, நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என 35 இடங்களில் நடைபெற்ற ரெய்டில் வெளியாகி உள்ளன. இந்த தேர்தலுக்காக பணம் கொடுக்கப்பட்ட விவரம் மட்டுமல்ல, இன்னும் பல ஆதாரங்கள் சிக்கியுள்ளன. மக்கள் நல்வாழ்வுத்துறையில் ட்ரான்ஸ்பர் வழங்கப்பட்டதற்கு வசூலித்த விவரங்கள், ஊழல், முறைகேடுகள் எல்லாம் வெளியாகியுள்ளன. ஆடிட்டர்கள் கூட இப்படி விவரமாக எழுதி வைத்திருக்க மாட்டார்கள், ஆனால், ஊழல் செய்ததை இவ்வளவு விவரமாக இவர்கள் எழுதி வைத்துள்ளனர்.

ஜெயலலிதா மரண மர்மம்
அதுமட்டுமல்ல, இன்றைக்கு மறைந்த முதல்வர் ஜெ., மரணத்தில் மர்மம் என்று பரவலாக பேசப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள ஆவணத்தில் 01-11-2016 அன்று, 'given to Doctor Balaji for expenses on HM's instructions" என்று எழுதியிருப்பது தெரியவந்துள்ளது. எச்.எம். என்றால் ஹெல்த் மினிஸ்டர். அவர் உத்தரவுபடி டாக்டர் பாலாஜி என்பவருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா கை ரேகை
டாக்டர் பாலாஜி என்பவர் யாரென்றால், அவர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருப்பவர். தஞ்சாவூர், அரவகுறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது ஜெ., மருத்துவமனையில் இருந்தார். அப்போது அந்த அதிமுகவின் வேட்பாளர்களுக்கு அந்த சின்னத்துக்காக ஜெ., கையெழுத்து போட முடியவில்லை. ஆகவே, அவரது கைவிரல் ரேகையை வாங்கி போட்டியிட்டார்கள். அதற்கு ஒரு மருத்துவர் சான்றிதழ் கொடுக்க வேண்டும். அந்த சான்றிதழை கொடுத்தது யாரென்றால் டாக்டர் பாலாஜி. அரசு மருத்துவரான டாக்டர் பாலாஜி அந்த ரேகை உண்மை தான் என்று சான்று கொடுத்திருக்கிறார்.

கூட்டுக்கொள்ளை
அந்த மருத்துவருக்கு 5 லட்ச ரூபாய் விஜயபாஸ்கர் மூலமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், பணம் கொடுக்கப்பட்டது 01-11-2016 அன்று, அதேநேரத்தில் கைரேகை பதிவு செய்தது அக்டோபர் 28 ஆம் தேதி, இது உண்மையா என்ற கேள்வி இப்போது வந்துள்ளது. அப்போது முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். ஆகவே, அவருக்கும் இந்த விவரம் நிச்சயம் தெரிந்திருக்கும். அப்போதெல்லாம் வாய் திறக்காத அவர் இப்போது விசாரணை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் என்றால், ஆட்சியில் இருந்தபோது கூட்டுக்கொள்ளை, கூட்டுச்சதி செய்தவர்கள் இரு அணிகளாக இப்போது வந்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

திமுக விசாரிக்கும்
எனவே, விசாரணை கமிஷன் வைத்தால் இரு அணியும் சிக்கும் என்பதால் நிச்சயம் அவர்கள் விசாரிக்கப்போவதில்லை. ஆனால் திமுக ஆட்சி அமைந்ததும் நிச்சயம் விசாரணையை முறையாக நடத்தும், அப்போது இரு அணியும் விசாரிக்கப்படும் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications