ஜெ. பிறந்தநாள்: தீச்சட்டி எடுத்த அமைச்சர் கோகுல இந்திரா... டிக்கெட் வாங்க அடேங்கப்பா திட்டம்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, நீடூழி வாழ வேண்டியும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக வேண்டியும், அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா தலைமையில் அண்ணா நகரில் உள்ள அம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் தீச்சட்டி எடுத்து வழிபட்டனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான செல்வி ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளையொட்டி, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதற்காக தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட கேக்கை, அமைச்சர் வளர்மதி வெட்டி, கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தார். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறந்தநாள் சிறப்பு மலரை அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன் வெளியிட, தென் சென்னை தெற்கு மாவட்டக் கழக இணைச் செயலாளரும், சென்னை மாநகராட்சி 121-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான நூர்ஜஹான் பெற்றுக்கொண்டார்.

ஜெயலலிதாவிற்கு வழிபாடு
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி கொண்டு வரப்பட்ட பிரசாதங்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் பூங்கொத்து வழங்கி, முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தீச்சட்டி ஏந்திய அமைச்சர்
முதல்வர் ஜெயலலிதா நலமுடன் வாழ வேண்டி அமைச்சர் கோகுல இந்திரா தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது அனைத்து பெண்களும் ஒரே டிசைனில் புடவை அணிந்திருந்தனர்.

3,008 பால் குடம்
கடந்த ஞாயிறன்று வடபழனி முருகன் கோவிலில் 3,008 பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினார் கோகுல இந்திரா. அப்போது அனைத்து பெண்களுக்கும் ஒரே நிறத்தில் பச்சை புடவை அணிந்திருந்தனர்.

ஆண்டு தோறும் பால்குடம்
தீவிர ஆன்மிகவாதியான கோகுல இந்திரா ஆண்டுதோறும் பால்குடம் எடுப்பது வாடிக்கையான நிகழ்வுதான். ஆனால் அமைச்சர் வளர்மதிதான் தீச்சட்டி ஏந்தி ஆவேச வேண்டுதலை நிறைவேற்றுவார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் இருந்த போது, அவரது விடுதலைக்காக தீச்சட்டி எடுத்தார் கோகுல இந்திரா. அது மட்டுமல்லாது அங்கப்பிரதட்சிணம் செய்தார்; மண் சோறு சாப்பிட்டார், பால்குடம் எடுத்தார். இப்போது மீண்டும் தேர்தல் வருதே... தன்னுடைய அரசியல் ஸ்டண்ட்டை ஆரம்பித்து விட்டார் என்கின்றனர் அதிமுகவினர்.
சீட் வாங்கவும், ஜெயித்தால் அமைச்சரவையில் இடம் பிடிக்கவும் இவர்கள் செய்யும் அட்ரா சிட்டி இருக்கிறதே கண்டம் விட்டு கண்டம் கிண்டலடிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications