சென்னையில் சாலை பாதுகாப்பு பேரணி - அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்
தமிழ்நாடு முழுவதும் சாலை பாதுகாப்பு வார விழா போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டது.
இதில் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த புகைப்படங்களும், அரசின் சாதனை விளக்க புகைப்படங்களும் இடம் பெற்றது.இந்த கண்காட்சி அரங்கத்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து உழைப்பாளர் சிலை அருகில் இருந்து சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நடைபேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில், சென்னை மேயர் சைதை துரைசாமி, மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை ஊழியர்கள், ஓட்டுனர்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.