செய்தியாளர்களை தவிர்த்து கேமராமேன்களுக்கு மட்டும் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்!
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை தவிர்த்து கேமரா மேன்களுக்கு மட்டும் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை தவிர்த்து கேமரா மேன்களுக்கு மட்டும் பேட்டியளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட மீனவ பிரதிநிதிகள் மாயமான மீனவர்களை மீட்டுத்தரக்கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் மீனவ பிரதிநிதிகள் சந்தித்தனர். இதைத்தொடர்ந்து மீனவ பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது தங்களின் கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை பற்றி பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கேமராமேன்களுக்கு பேட்டி
இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்களை தவிர்த்து கேமராமேன்களுக்கு மட்டும் அவர் பேட்டியளித்தார்.
தொடரும் தேடுதல்..
அப்போது ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மீட்பு பணியில் கப்பல், மற்றும் விமானப்படையை பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
பிற மாநிலங்களில் பத்திரம்
ஓகி புயலால் காணாமல் போன தமிழக மீனவர்கள் 2,805 பேர் பிற மாநிலங்களில் பத்திரமாக உள்ளனர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். லட்சத்தீவில் 283, கேரளாவில் 152, கர்நாடகாவில் 975, மகாராஷ்டிராவில் 236 பேர் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
போர்க்கால அடிப்படையில்..
ஆளில்லா தீவுகளிலும் தேடுதல் பணி நடந்து வருகிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
முதல்வர் சந்திப்பு திடீர் ரத்து
முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அவரது செய்தியாளர் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.