சொன்ன நேரத்திற்கு வராத அமைச்சர்.. காத்திருந்து நொந்து நூடூல்ஸ் ஆன நீச்சல் வீரர்கள்!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறிய நேரத்தில் வராததால் நீச்சல் போட்டிக்காக நீச்சல் வீரர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் அவர்கள் நொந்து போயினர்.
சென்னை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தாமதமாக வந்ததால் சென்னையில் நீச்சல் போட்டிக்காக காத்திருந்த வீரர்கள் எரிச்சல் அடைந்தனர்.
எந்த அடிப்படை வசதியும் செய்யப்படாமல் இருந்ததால் நீச்சல் வீரர்கள் மற்றும் இதனைக் காண வந்த அவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கடும் சிரமம் அடைந்தனர்.

தமிழக முதல்வர் கோப்பைக்கான நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்று போட்டிகள் சென்னை நேற்று வேளச்சேரியில் உள்ள நீச்சல் மையத்தில் நடைபெற்றன. இதில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து 600 நீச்சல் வீரர்கள் வந்திருந்தனர்.
காலையில் 100 மீட்டருக்கான போட்டிகள் நடந்து முடிந்தது. எஞ்சிய 200 மற்றும் 1500 மீட்டருக்கான போட்டிகள் மாலை 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதில் பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைப்பார் என்றும், வெற்றி பெறும் வீரர்களுக்கு அவரே பரிசு வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைச்சரும் ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்நிலையில் போட்டிக்காக மாணவர்கள் தயார்நிலையில் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் கூறியபடி குறிப்பிட்ட நேரத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவில்லை.
இதனால் போட்டிகள் தொடங்குவது தாமதமானது. பின்னர் மாலை 5 மணிக்கே அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்தார். இதையடுத்து 5 மணிக்குப் பின்னரே போட்டிகள் நடைபெற்றன.
அமைச்சர் தாமதமாக வந்ததால் காலையில் முதல் காத்திருந்த நீச்சல் வீரர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படாமல் இருந்ததால் பெரும் அவதியடைந்தனர்.












Click it and Unblock the Notifications