அம்மாவின் உத்தரவுப்படி ரூ.88.5 லட்சம் இலவச மிக்சி, கிரைண்டர்கள் வழங்கிய அமைச்சர் பழனியப்பன்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூரில் ரூ.88.5 லட்சம் மதிப்புள்ள இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை அமைச்சர் பி.பழனியப்பன் வழங்கினார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பேரூராட்சியில் தமிழக அரசின் இலவச மின்சாதன பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடந்த விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கலந்து கொண்டார்.
அவர் 2 ஆயிரத்து 180 பேருக்கு ரூ. 88.5 லட்சம் மதிப்புள்ள இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில்,
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை அளிப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அறிவித்தார். அதன்படி அவர் ரேஷன்கார்டுதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை வழங்கி வருகிறார். இதற்காக ஆண்டுதோறும் ரூ. 1,500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் வரும் 31ம் தேதிக்குள் அனைத்து பயனாளிகளுக்கும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கப்படும். கடத்தூரை தலைமையிடமாக கொண்டு விரைவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைகிறது. கடத்தூர் பேருந்து நிலையம் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடத்தூரில் பத்திரப்பதிவு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் காந்திநகர் மற்றும் புதுரெட்டியூர் ஆகிய இடங்களில் புதிய ரேஷன்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ள திட்டங்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் மட்டுமே இது போன்ற நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இத்தகைய திட்டங்களுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வர வேண்டும் என்றார்.