தனியார் பாலால் குழந்தைகளுக்கு புற்றுநோய்.. அமைச்சர் 'பகீர்' குற்றச்சாட்டு!
தனியார் பாலால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக அமைச்சர் ரஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: தனியார் பாலால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக அமைச்சர் ரஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சோதனை செய்ய தனியார் பால் பாகெட்டுகள் புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் ராஜேந்திர நேற்று திருவள்ளூரில் ஆவின் பால் பண்ணை கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுகிறது, அது உடல் நலத்துக்கு நல்லது இல்லை என்றார்.
மேலும் ஆவின் பால் தான் ஆரோக்கியமானது. எனவே தனியார் பால் பாக்கெட்டுகளை வாங்கும் முன் யோசித்து வாங்குங்கள் என்றார்.
பால் முகவர்கள் கண்டனம்
அமைச்சரின் இந்த பேச்சுக்கு பால் முகவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இத்தனை நாள் தாங்கள் கூறியது அவருக்கு தெரியாதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
குழந்தைகளுக்கு புற்றுநோய்
இதைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்தார். அப்போது தனியார் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
புனேவில் சோதனை
இது குறித்து ஆய்வு செய்ய தனியார் பால் பாக்கெட்டுகள் புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆதாரம் கிடைத்தவுடன் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
10 நாட்கள் கெடாத பால்
10 நாட்கள் கெடாமல் இருக்கும் பால் தூய்மையான பால் அல்ல என்றும் அவர் குற்றம்சாட்டினார். பாலில் ரசாயனம் கலப்பது உறுதியானால் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கலப்படம் - வழக்குதொடரப்படும்
மேலும் பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது அரசு வழக்கு தொடரும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மக்களுக்கு தேவையான அளவு பாலை கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். அமைச்சரின் இந்தப் பேச்சு பீதியை ஏற்படுத்தியுள்ளது.