கேள்வி கேட்டா அவர் பதில் சொல்றாரா? ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்.. செந்தில் பாலாஜி காட்டம்!
சென்னை : "நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். நான் பதில் சொல்கிறேன். அவர் கேள்விகளுக்கு பதில் சொல்கிறாரா? நான் வாட்ச் பில் தான் கேட்டேன். முதல் நாள் கேள்வி கேட்கும்போதே அந்த வாட்ச் நண்பர் மூலம் எனக்கு வந்தது எனச் சொல்லி இருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்" எனக் காட்டமாக அண்ணாமலையை விமர்சித்துள்ளார் செந்தில் பாலாஜி.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, "திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சொத்து பட்டியலை வெளியிட்டு இருக்கிறார். ஊழல் பட்டியலை வெளியிடுவதற்கும் சொத்து பட்டியலை வெளியிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொத்து பட்டியலை தாக்கல் செய்து உள்ளார்கள். அப்போதே அதை வைத்து வழக்கு தாக்கல் செய்திருக்கலாம்.

அதையெல்லாம் விட்டுவிட்டு முதலில் ஊழல் பட்டியல் வெளியிடுகிறேன் என்று சொல்லிவிட்டு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சொத்து பட்டியலை வெளியிடுகிறார். அடுத்த முறை பார்க்கும்போது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள், அல்லது தெரிந்தவர்களிடம் கேட்டு இந்த மாதிரி அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள் எனக் கூறினார்.
மேலும், அவதூறு பரப்புவோர் யாராக இருந்தாலும் சரி, நீங்கள் சொல்கின்ற நபராக இருந்தாலும் சரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையிலேயே மக்கள் பணியாற்ற நினைப்பவர்கள் மக்கள் தொடர்பான கருத்துகளை தேவைகளை அரசுக்கு முன் வைக்கலாம். நீங்கள் குறிப்பிடும் நபர் ஒரு கோமாளி. பத்திரிகையாளர்களை கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்லிவிட்டு வீடியோ வெளியிடுகிறார். வீடியோவை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு போக வேண்டியது தானே. நாங்கள் எங்களது வேலையை பார்ப்போமே என்று நீங்கள் அவரிடம் சொல்ல வேண்டும்.

நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். நான் பதில் சொல்கிறேன். அவர் கேள்விகளுக்கு பதில் சொல்கிறாரா? நான் வாட்ச் பில் தான் கேட்டேன். முதல் நாள் கேள்வி கேட்கும்போதே அந்த வாட்ச் நண்பர் மூலம் எனக்கு வந்தது எனச் சொல்லி இருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். யார் யார் வாட்ச் வாங்கியிருக்கிறார்கள் என்றெல்லாம் தேடிப் பிடித்து அதில் ஒருவரை தனது நண்பராக்கி அவர் கொடுத்தார் என்று பல மாதங்களுக்கு பின்னர் சொல்கிறார்.
அன்றைய தேதியில் 2 லட்சம் ரூபாய் அக்கவுண்டில் பணம் எடுத்து இருக்க வேண்டும் அல்லவா அப்படி ஆவணம் கொடுக்கவில்லை. இரண்டு லட்சத்திற்கு மேல் ரொக்கப் பணம் எடுக்கக் கூடாது என்று சட்டம் போட்டது யார்? அதை மீறியது எப்படி? இந்த பணம் எப்படி வந்தது என்பதெல்லாம் புரியவில்லை. அதிக விலை கொடுத்து வாங்கிய வாட்ச் குறைந்த விலைக்கு யாராவது கொடுப்பார்களா ?ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்." எனக் காட்டமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications