வேட்டியை மடிச்சு கட்டிக் கொண்டு களத்தில் இறங்குனா.. விஜயபாஸ்கர் திடீர் ஆவேசம்
விஜயபாஸ்கர் பொதுக்கூட்டத்தில் டிடிவியை தாக்கி பேசினார்.
புதுக்கோட்டை: "நான் கோட்டைக்கு போனால் அமைச்சர். மருத்துவமனைக்கு போனால் டாக்டர். ஜல்லிக்கட்டு போட்டி என்றால் வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கி நிற்பேன்" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
திலகர் திடலில் அதிமுக சார்பில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் கலைத்திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவித்தொகையும் வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய அமைச்சர், தமிழ்களின் பாரம்பரியமான நாட்டுப்புற கலைகளும், ஜல்லிக்கட்டு போட்டிகளும் எந்த காலத்திலும் அழியவே அழியாது என்றார். "நான் கோட்டைக்கு போனால் அமைச்சர். மருத்துவமனைக்கு போனால் டாக்டர். ஜல்லிக்கட்டுன்னு வந்துட்டா வேட்டிய மடித்து கட்டிக் கொண்டு களத்தில் காளையின் மூக்காணாங் கயிற்றை அறுக்கும் தமிழன்" என்றார். அவ்வளவுதான். அமைச்சர் இப்படி பேசியதும் கூடியிருந்த மக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.
தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர், எவ்வளவோ பேர் தன்னை வசை பாடி உள்ளார்கள். அவ்வளவு பேரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற போகிறேன். இன்னும் ஒரே வாரத்தில் இதே புதுக்கோட்டையில் போட்டிக்கூட்டம் ஒன்றையும் நடத்த போகிறேன். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.