ஜெயலலிதா மீண்டும் முதல்வராகணும்: படி பூஜை செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை முருகன் கோவிலில் 207 படிகளில் பூஜை செய்து சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்தார். அவரது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது. சிறை சென்ற ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாக எத்தனையோ யாகங்கள், பூஜைகள் செய்தனர். அதேபோல மீண்டும் முதல்வராக பல்வேறு சிறப்பு யாகங்கள் செய்து வருகின்றனர்.
மண்டியிட்டு பிரார்த்தனை, மடியேந்தி பிரார்த்தனை, மண்சோறு என பல்வேறு பிரார்த்தனை செய்த அதிமுகவினர் அதற்கு அடுத்தபடியாக இப்போது படி பூஜை செய்து பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.
அமைச்சர் விஜயபாஸ்கர்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான டாக்டர் விஜயபாஸ்கர் நேற்று காலை விராலிமலை முருகன் கோவிலில் இருக்கும் 207 படிகளிலும் சிறப்பு பூஜை, செய்து தேங்காய் உடைத்து, முருகன் கோவிலுக்கு அபிஷேகம் செய்தார்.
மக்கள் பிரச்சினை இருக்கே
ஜெயலலிதா இன்னும் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மக்கள் பிரச்சினையை கவனிக்காமல் அமைச்சர்கள், பூஜைகள், யாகங்கள் செய்து கொண்டிருக்கின்றனர் என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் யாகம்
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண் டும் முதல்வராக வேண்டி திருச்சி அம்மா மண்டபத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர் தலைமையில் காவிரி துலாஸ்நானம் மற்றும் பஞ்ச சுத்த மகா சுதர்சன நரசிம்ம தன்வந்திரி ஹோம யாகம், ஜெய பாராயணம் நடைபெற்றது. அரசு தலைமை கொறடா மனோகரன், எம்எல்ஏ பரஞ்ஜோதி, கோட்டத் தலைவர்கள் சீனிவாசன், லதா, ஞானசேகரன், மனோகரன், பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி, மணிகண்டம் சேர்மன் முத்துக்கருப்பன், வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
போனபதவி கிடைக்கும்
இந்த யாகம் நடத்தினால் பதவி போனவர்களுக்கு மீண்டும் பதவி, அந்தஸ்து விரைவில் கிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக இந்த யாகம் நடத்தப்பட்டது என்றனர்.
கோவில் ஊழியர்களும்
ஸ்ரீ ரங்கநாதர் கோயில் வளாகத்தில் யாகம் நடத்தினால் சிக்கலாகும் என்பதால், பிரச்னைகளை தவிர்க்க அம்மா மண்டபம் படித்துறையில் யாகம் நடந்துள்ளது. யாக பணிகளில் கோயில் ஊழியர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர்.