சென்னை: செல்போனில் பிஸியாக இருந்த ஏரோபிரிட்ஜ் ஆபரேட்டர்: கோ ஏர் விமானம் மோதி விபத்து
சென்னை: மும்பையில் இருந்து 168 பயணிகளுடன் சென்னை வந்த கோ ஏர் விமானம், பயணிகள் ஏறி இறங்கும் விமான நிலைய ஏரோபிரிட்ஜ் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஏரோ பிரிட்ஜ் ஆபரேட்டர் விமானத்தை கவனிக்காமல் செல்போன் பேசிக்கொண்டிருந்த காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜி 8 305 கோ ஏர் விமானம் மும்பையில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு 168 பயணிகள் விமான நிலைய ஊழியர்களுடன் வெள்ளிக்கிழமை காலை வந்தது. தரை இறங்கிய விமானம் சட்டென்று ஏரோபிரிட்ஜ் மீது மோதியது இதில் விமானத்தின் கதவு பகுதி சேதமடைந்தது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று விமான நிலைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்கட்ட விசாரணையில் ஏரோ பிரிட்ஜ் ஆபரேட்டர் விமானத்தை கவனிக்காமல் செல்போன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சரியான நேரத்தில் விமானத்தின் அருகில் ஏரோபிரிட்ஜை கொண்டு போகாததே விபத்திற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. விமான நிலைய ஊழியர் ஏரோ பிரிட்ஜ் ஆபரேட்டரை எச்சரித்தும் அவர் கவனிக்காமல் விட்டதே விபத்திற்குக் காரணமாகிவிட்டது.
காலை 6.22 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் தனது பார்க்கிங் ஏரியாவிற்கு 6.33 மணிக்கு வந்தது. ஆனால் ஏரோ பிரிட்ஜ் பொருத்துவதற்கு 2 நிமிடம் தாமதமாகிவிட்டது. இதுவே விபத்திற்குக் காரணமாகிவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இந்த விமானம் அந்தமான் செல்ல இருந்தது. ஆனால் சேதமடைந்த காரணத்தால் காத்திருந்த பயணிகள் அனைவரும் வேறு விமானம் மூலம் அந்தமானுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கோ ஏர் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications