அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் அழகிரியின் ஐவர் குழு! 30ம் தேதி "திராணி' காட்ட தீவிரம்!!
மதுரை: தென்மாவட்டங்களில் திமுகவில் இருக்கும் அதிருப்தியாளர்களை ஒருங்கிணைப்பதில் மு.க. அழகிரியின் ஐவர் குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக திமுகவில் இருந்து மு.க. அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் திமுகவை விமர்சித்து வருகிறார்.
அத்துடன் மதுரையில் 30-ந் தேதியன்று தமது பிறந்த நாளின் போது முக்கிய முடிவு எடுப்பேன் என்றும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் அழகிரி என்ன செய்யப் போகிறார்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அழகிரிக்கு ஆதரவு இல்லையா?
அழகிரிக்கு ஆதரவாக எந்த ஒரு தென் மாவட்ட செயலரும் இல்லை என்பது ஸ்டாலின் தரப்பினரின் வாதம்.

குவிக்கப்பட்ட தென்மாவட்ட திமுக நிர்வாகிகள்.
இதற்காகவே அழகிரி நீக்கப்பட்ட போது தென்மாவட்ட திமுக நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து கருணாநிதியுடன் ஆலோசனை நடத்த செய்தனர்.

அதிருப்தியாளர்களுக்கு வலை
ஆனால் அழகிரி தரப்போ தற்போது மாவட்ட செயலர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை வளைக்கத் தொடங்கி இருக்கிறது. திமுகவில் அனைத்து மாவட்டங்களிலுமே நீண்டகாலமாக கோலோச்சி வரும் மாவட்ட செயலர்களுக்கு எதிராக எப்படியும் ஒரு அணி இருக்கவே செய்கிறது.

ஐவர் குழு
இப்போது இந்த அதிருப்தி அணியை வளைத்துப் போட்டு அழகிரி ஆதரவாளர்களாக்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெறுகிறது. இதற்காக மு.க. அழகிரியின் ஐவர் குழு ஒன்று தீவிரமாக செயல்பட்டும் வருகிறதாம்.

30ல் திராணி காட்டும் அழகிரி தரப்பு
மு.க. அழகிரியின் பிறந்த நாளான வரும் 30-ந் தேதியன்று இந்த "அதிருப்தி திமுகவினர்" மதுரையில் ஒன்று திரண்டு அழகிரியின் செல்வாக்கை திமுக தலைமைக்கு காட்ட வேண்டும் என்பதுதான் இந்த ஐவர் குழுவுக்கான அசைன்மென்ட் என்கிறது மதுரை திமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications