சீமான், திருமுருகன் காந்திக்காக ஒலித்த ஸ்டாலின் குரல்.. ட்விட்டர் கணக்கை முடக்கியதற்கு கண்டனம்
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டு இருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!" என்று குறிப்பிட்டு உள்ளார்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடங்கி அடிமட்ட தொண்டர் வரை அனைவரும் ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். சமூக வலைதளங்களின் வாயிலாகவே அக்கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகளை பதிவிடுகின்றனர்.

அதேபோல் மத்திய மாநில அரசுகளின் மீதான குற்றச்சாட்டுகள், விமர்சனங்களையும் ட்விட்டரில் நாம் தமிழர் கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக தங்கள் தமிழ் தேசிய கொள்கை குறித்தும், ஈழப்போர் பற்றியும் சீமானும் அவரது கட்சியினரும் அதிகளவில் எழுதி வந்ததுடன், அதுகுறித்து பேசிய வீடியோக்களையும், தடை செய்யப்பட்ட அமைப்பின் கொடி, தலைவரின் படங்களையும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள்.
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான இடும்பவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்ளிட்டோர் ட்விட்டரில் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். அதேபோல் மற்றொரு தமிழ் தேசிய இயக்கமான மே 17 அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் தமிழ் தேசியம், ஈழ விடுதலை, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பெயர், தலைவரின் படங்கள், பெயர்களை ட்விட்டரில் பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் இடும்பவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

சட்டப்பூர்வ கோரிக்கைகளை ஏற்று இந்தியாவில் இவர்களின் கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டர் விளக்கமளித்து இருக்கிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பெயர், தலைவரின் படங்களை பயன்படுத்தியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதே சமயம், சீமானும் நாம் தமிழர் நிர்வாகிகளும் தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் முக ஸ்டாலின், திமுகவை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருவதால் தமிழ்நாடு காவல்துறை பரிந்துரையின்பேரில் அவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினே இந்த முடக்கத்துக்கு கண்டனம் தெரிவித்ததன் மூலம், தமிழ்நாடு காவல்துறை எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்பது உறுதியாகிறது.












Click it and Unblock the Notifications