மறைந்த சிவனடியார் ஆறுமுக சுவாமிக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்கவும் அங்கே தமிழின் தேவாரம் ஒலிக்கவும் தொடர்ந்து போராடிய சிவனடியார் ஆறுமுகசாமியின் மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்கவும் அங்கே தமிழின் தேவாரம் ஒலிக்கவும் தொடர்ந்து போராடிய சிவனடியார் ஆறுமுகசாமியின் மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் தேவாரம் பாடக் கூடாது என்று தீட்சிதர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அதனை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர் சிவனடியார் ஆறுமுகசாமி. தீட்சிதர்களின் கடும் எதிர்ப்பையும் அனாயசமாக எதிர் கொண்ட இவரின் நீண்ட போராட்டத்திற்கு பின்னரே தமிழகத்தில் உள்ள நடராஜர் கோயிலில் தமிழ் ஒலித்தது.
இதுதொடர்பாக நேருக்கு நேராக தீட்சிதர்களுடன் போராடிய சிவனடியார் ஆறுமுகசாமிக்கு, 2008-ம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பும் பலம் சேர்த்தது. தீர்ப்பின்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறுமுகசாமி தேவாரத்தை வெற்றியின் களிப்போடு ஓங்கி பாடினார்.
இந்நிலையில் சிதம்பரம் அருகே குமுடிமலை கிராமத்தில் 94 வயதான சிவனடியார் ஆறுமுகசாமி சனிக்கிழமை உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திமுக செயல்தைலவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோயிலின் சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருவாசகம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமி மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.