வெட்கத்தைவிட்டு சொல்றேன்... மெரினாவுக்காக முதல்வரின் கையை பிடித்து கெஞ்சினேன்- அழுத ஸ்டாலின்
சென்னை: கருணாநிதிக்கு மெரினாவில் அண்ணா சமாதிக்கு பக்கத்தில் இடம் கொடுக்குமாறு முதல்வரின் கையை பிடித்து கெஞ்சினேன் என்று ஸ்டாலின் தழுதழுத்த குரலில் பேசினார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து அவர் இல்லாத முதல் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஜெ.அன்பழகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் திமுகவின் தலைவர் ஸ்டாலின்தான் என்று பேசினர்.
இதையடுத்து துரைமுருகன், கருணாநிதியுடனான தனக்கிருந்த உறவு குறித்து நெகிழ்ச்சியுடன் கூறினார். இதையடுத்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
இடம் கிடைக்க வேண்டும்
அப்போது அவர் பேசுகையில் கருணாநிதியில்லாமல் செயற்குழு கூட்டத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நீங்கள் தலைவர் மட்டும்தான் இழந்துள்ளீர்கள். ஆனால் நான் தந்தையையும் சேர்த்து இழந்துள்ளேன். கருணாநிதி தனக்கு அண்ணா சமாதி பக்கத்தில் ஒரு இடம் வேண்டும் என்று எப்போதோ கூறியிருந்தார்.
இழக்க தயார்
இதையடுத்து அவரது ஆசையை நிறைவேற்ற துரைமுருகன் சார்பில் முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது. மேலும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற எதையும் இழக்க தயார் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
கையை பிடித்து கெஞ்சினேன்
அதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தேன். அப்போது மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். வெட்கத்தை விட்டு சொல்கிறேன், அவரது கைகளை பிடித்துக் கொண்டு கெஞ்சினேன்.
வெற்றி
பின்னர் கருணாநிதிக்கு இடம் கொடுக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வந்தன. முதல்வரின் கையை பிடித்து கெஞ்சியும் இடம் கிடைக்கவில்லை என்று வேதனையடைந்தேன். இதையடுத்து மூத்த வழக்கறிஞர் வில்சனிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினேன். அவரும் கோர்ட்டுக்கு சென்றால் வெற்றி பெறலாம் என்றார்.
நன்றி
இதையடுத்து கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஏதோ நான் செய்த சாதனை போன்று இங்கு இருப்பவர்கள் பேசினார்கள். தலைவருக்கு மெரினாவில் இடம் கிடைத்ததற்கு சிறப்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் வில்சன் உள்ளிட்ட வழக்கறிஞர் குழுவினருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று மிகவும் உருக்கமாக பேசினார் ஸ்டாலின்.