கண்புரை அறுவை சிகிச்சை.. கருப்பு கண்ணாடியுடன் சட்டசபை வந்த ஸ்டாலின்.. நலம் விசாரித்த முதல்வர்!
சென்னை: கண்புரை அறுவை சிகிச்சைக்கு பின் சட்டசபைக்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினிடம் முதல்வர் நலம் விசாரித்தார்.
மு.க.ஸ்டாலினுக்கு சென்னை சங்கர நேத்ராலயாவில், கண்புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனால் கடந்த 3 நாட்களாக அவர் சட்டசபைக்கு வர முடியவில்லை. இன்று அவர் கருப்பு கண்ணாடி அணிந்து சட்டசபை வந்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்.

சட்டசபைக்குள், ஸ்டாலினின் உடல்நிலை குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்தார். சில அமைச்சர்களும் ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து அக்கறையோடு விசாரித்தனர். நலம் விசாரித்தவர்களிடம் ஸ்டாலின் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இதேபோல, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய சபாநாயகர் தனபாலிடம், ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
ஜெயலலிதா இருந்த காலகட்டங்களில் மாவட்ட அளவில் கூட திமுகவினர் இல்ல திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கூட அதிமுக நிர்வாகிகள் செல்ல கூடாது என கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக-திமுக இரு கட்சியினருமே நெருக்கம் காட்டி வருகிறார்கள். அரசியல் காரணங்களுக்காக சூடான கருத்துக்களை பரிமாறிக்கொண்டாலும், உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் நேசம் காட்டிவருவது ஆரோக்கிய அரசியலை நோக்கி தமிழகம் பயணிப்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications