தடை செய்யப்பட்ட ரூபாய்கள்... தவித்த மக்கள் - கண்டு கொள்ளாத தமிழக அரசு
500,1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட பின்னர் தமிழகத்தில் ஏழை, நடுத்த மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மீது மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் தமிழகத்தின் நடுத்தரவர்க்கத்தினர் பரிதவித்தனர். நோட்டுக்களை மாற்றிக்கொள்ள கால அவகாசமும் அதற்கான வழிமுறைகளையும் மத்திய அரசு தெளிவுபடுத்தியிருந்தாலும் அவைகள் மக்களுக்கு சென்று சேராததால், இனி 500, 1000 ரூபாய் செல்லாது என்கிற தகவல் மட்டுமே அவர்களை ஆக்ரமித்தது. அதனால், செவ்வாய்கிழமை முழுவதும் மக்கள் பட்ட கவலைகளும் அவஸ்தைகளும் சொல்லி மாளாது.
இதுகுறித்து, தமிழக அரசு உடனடியாக தெளிவான வழிகாட்டுதல்களை மக்களுக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், எந்த அறிவிப்பும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை என்கிற கோபம் மக்களிடம் ஆங்காங்கே வெளிப்பட்டது. தமிழக அரசு ஏன் எந்த அறிவிப்பையும் கொடுக்கவில்லை? அரசு அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தனர்? என்பது பற்றி விசாரித்தபோது, மத்திய கேபினெட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ராமமோகனராவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரும் உடனடியாக நிதித்துறை அமைச்சர் ஓ.பி.எஸ்.சையும் நிதித்துறை செயலாளர் சண்முகத்தையும் தொடர்பு கொள்ள முயற்சி எடுத்தார். இதில், சண்முகத்தை மட்டுமே அவரால் தொடர்புகொள்ள முடிந்தது. ஓ.பி.எஸ்.சை தொடர்புகொள்ள முடியவில்லை. தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்துள்ளார் ஓ.பி.எஸ். ! இரவு முழுவதும் மக்கள் பரிதவித்துக்கொண்டிருப்பதும் , 500, 1000 நோட்டுக்களை மாற்ற ஆலாய் பறந்துகொண்டிருந்ததும் நிதியமைச்சருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
இத்தனைக்கும் முதல்வர் கவனித்து வந்த இலாகாக்களை ஓ.பி.எஸ். கவனித்து வரும் நிலையில் மக்களின் அவஸ்தைகள் அவருக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், அமைச்சராவது அதிகாரிகளை தொடர்புகொண்டு விவாதித்திருக்க வேண்டும். அப்படி எந்த விவாதமும் நடக்கவில்லை, இந்த நிலையில், அப்பல்லோவிலிருக்கும் சசிகலாவுக்கு தகவல் தந்ததோடு, பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு தமிழக மக்களின் அவஸ்தைகளை தெரிவித்திருக்கிறார்கள் உயரதிகாரிகள்.
அவரோ, மத்திய அரசு தெளிவான வழிகாட்டுதல்களை தந்திருக்கிறது. ஒரு அறிக்கை மூலம் அதனை வெளியிட்டு மக்களின் பயத்தைப் போக்குங்கள் என உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், முதல்வர் ஜெயலலிதா நன்றாக இருப்பதாகவும் பேசுவதாகவும் சொல்லப்பட்டு வரும் நிலையில், நோட்டுக்கள் விசயத்தில் அப்பல்லோவிலிருந்து எந்த உத்தரவும் வராத நிலையில் தன்னிச்சையாக நாம் எப்படி அரசு அறிவிப்பை செய்வது? என்கிற குழப்பத்திலும் ஆலோசனையிலுமே நேரத்தை கடத்திக்கொண்டே இருந்தார்கள் உயரதிகாரிகள். இருப்பினும் எந்த உத்தரவும் அதிகாரிகளுக்கு சொல்லப்படாததால் அவர்களும் அமைதியாகி விட்டனர் என்று கூறினார்கள் கோட்டை அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications