கன்டெய்னர் லாரி பணத்தை மீட்காமல் கடுகு டப்பாவில் பணத்தை எடுப்பதா..? மோடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்
கருப்பு பணத்தை மீட்க வேண்டுமானால் கன்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற பணத்தை மீட்டிருக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.
புதுச்சேரி : கருப்பு பணத்தை ஒழிக்கப்போவதாக கூறுபவர்கள் கன்டெய்னர்களில் கடத்தப்பட்ட ரூ.570 கோடியை மீட்காதது எதற்காக என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தின் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றத்தை போலவே, புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் வரும் 19ம்தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், அத்தொகுதியில் நேற்று வேனில் பயணித்து பிரசாரம் செய்தார்.

அவர் பேசுகையில், கருப்பு பணத்தை ஒழிக்க போகிறேன் என மோடி அறிவிப்பு வெளியிட்டதை வரவேற்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்கும் நடவடிக்கையை மோடி எடுக்கவில்லை. வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு இந்திய குடிமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று தேர்தல் பிரசாரத்தில் மோடி தெரிவித்தார். ஆனால் இதுவரை 15 ரூபாய் கூட, யாருடைய வங்கி கணக்கிலும் டெபாசிட் ஆகவில்லை.
ஒருவாரமாக வங்கிகளின் வாசலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் மோடியோ அதை கவனிக்காமல் ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணிக்கிறார். பொதுமக்களின் சிரமங்களில் பங்கெடுக்க ராகுல்காந்தி வங்கியில் வரிசையில் நின்றார். நியாயமாக, மத்திய அமைச்சர்கள் தான் வரிசையில் நின்றிருக்க வேண்டும். எனவே இந்த விஷயத்தில் ராகுல் காந்தியை விமர்சனம் செய்ய, பாஜகவிற்கு எந்த அருகதையும் இல்லை.
கருப்பு பணத்தை தடுக்க வேண்டும் என நினைத்திருந்தால் கன்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடியை மீட்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதனை செய்யாமல், பொதுமக்கள் கடுகு டப்பாவில் சேர்த்து வைத்த பணத்தை செல்லாது என பாஜக அரசு அறிவித்தது. ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி உதாரணம். ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு தமிழகத்தின் ஆட்சி உதாரணம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications