மிட் நைட் மசாலா டிவி கொண்டுவந்தார் மோடி.. வெங்கய்யா நாயுடு விவகார பேச்சு
புதுச்சேரி: 'மிட்நைட் மசாலா டிவி' சேனல் மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்று புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேசியது தொண்டர்கள் இடையே கலகலப்பை ஏற்படுத்தியது.
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தினை நேற்று திறந்து வைத்தார். அதன் பின்னர் ரோஸ்மா திருமண நிலையத்தில் நடந்த பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
வெங்கய்யா நாயுடு அப்போது பேசுகையில், "இன்றைய இளைய சமுதாயம் முழுவதும் மோடியின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, சீனா, ஆஸ்திரேலியா என எந்த நாட்டுக்ககு மோடி சென்றாலும் அங்கிருக்கும் மக்கள் அனைவரும் அவரை புகழ்கிறார்கள்.
கடந்த ஐம்பது ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் வெறும் முன்று கோடி பேருக்கு மட்டுமே வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. ஆனால், மோடி ஆட்சியில் இருபது கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.
மிட்நைட் மசாலா
முந்தைய ஆட்சியில் தூர்தர்ஷன் போன்ற ஒரே ஒரு தொலைக்காட்சி மட்டுமே இருந்தது. அதுவும் கருப்பு வெள்ளை டிவி. ஆனால், மோடி ஆட்சியில் 'வி டிவி', 'மா டிவி', 'உதயா டிவி', 'சூரியா டிவி', 'மிட் நைட் மசாலா டிவி' உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேனல்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.
சாலைகள் பெருகியுள்ளன
மேலும், காங்கிரஸ் ஆசியில் ஒரு வழி சாலைகளுக்கே வழி இல்லாமல் இருந்தது. ஆனால் மோடி ஆட்சியில், நான்கு வழி, ஆறு வழி என தேசிய நெடுஞ்சாலைகள் நீண்டு கொண்டே இருக்கின்றது. கிராமப் புறங்களிலும் அதிகமாக சாலை வசதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆகாயம் முதல் பாதாளம்வரை
காங்கிரஸ் ஆட்சியில் அனைத்திலுமே ஊழல்தான். எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. பூமியின் மீதும் ஊழல், பூமிக்கு அடியிலும் ஊழல், ஆகாயத்திலும் ஊழல், விண் வெளியில் 2ஜி ஊழல்.
காங்கிரசால் முடியவில்லை
ஆனால் பாஜகவின் இந்த 18 மாத ஆட்சியில் ஊழல் புகார்களே கிடையாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற தோல்வியை காங்கிரஸ் கட்சியால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தான் அரசை செயல்படவிடாமல் தடுத்தும், நாடாளுமன்றத்தை முடக்கியும், சட்டங்களை இயற்ற விடாமலும் தடுத்து வருகிறது.
எத்தனை திட்டங்கள்
மோடியின் நல்லாட்சியில் ஏழைகள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காப்பீடு திட்டங்கள், அனைவருக்கும் வங்கிக்கணக்கு, விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டம் போன்றவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.
காங். கலைக்காத ஆட்சியா
மேலும், காங்கிரஸ் ஆட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு மாநில அரசுகளைக் கலைத்திருக்கின்றனர். 465 அவசரச் சட்டங்களை கொண்டு வந்தனர். ஆனால் மோடி அரசு அருணாசலப்பிரேதச அரசை கலைத்தற்கும், இரண்டு அவசரச் சட்டங்களை கொண்டு வந்ததற்கும் எதிர்க்கட்சிகள் கூக்குரலிடுகின்றன.
தலித் மாணவர்
ஹைதராபாத் பல்கலைகைக்கழகத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது தலித் மாணவர்கள் உட்பட பத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது இவர்கள் எங்கு சென்றார்கள்? சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் செந்தில்குமார் தற்கொலையிலும், விழுப்புரத்தில் மூன்று மருத்துவக் கல்லூரி மாணவிகள் தற்கொலை தொடர்பாகவோ ஏன் காங்கிரஸ் குரல் தரவில்லை. அக்கட்சியின் தலைவர்களும் வந்து ஆறுதல்கூட கூறவில்லை.
மன்னராட்சி
காங்கிரஸில் தாத்தா, பாட்டி, அம்மா, மகன், பேரன் என மன்னராட்சி நடைபெறுகிறது. ஆனால் பா.ஜ.கவில் டீ விற்பவர் கூட இந்திய நாட்டின் பிரதமாராகிவிட முடியும். அனைத்து கட்சிகளும் பல கட்சிகளாக உடைந்து கிடக்கிறது. காங்கிரசில் ஜனதா காங்கிரஸ், யூத் காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ், மூப்பனார் காங்கிரஸ், ரங்கசாமி காங்கிரஸ் என்றெல்லாம் உள்ளது. திராவிட இயக்கங்கள், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. என உடைந்துள்ளது. ஆனால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரே கட்சி நமது பா.ஜ.க. கட்சி" என்று தெரிவித்தார்.
வாயை கொடுத்து வாங்கிவிட்டார்
வெங்கய்யா நாயுடு எப்போதுமே நகைச்சுவையாக பேசக்கூடியவர். அடுக்குமொழியிலும் அடித்துவிடுவார். இந்தியா முழுக்க இதேபோன்ற டிவி டயலாக்குகளை அவர் பேசியுள்ளார். ஆனால், புதுச்சேரியில் மிட் நைட் மசாலா என்ற ஒரு டிவி சேனலையும் சேர்த்து பேசிவிட்டார்.