குரங்கை கொடுமைப்படுத்தி வயரால் கழுத்தை இறுக்கி எரித்துக் கொன்ற மருத்துவ மாணவர்கள்.. வேலூரில் ஷாக்
குரங்கை கொடுமைப்படுத்தி கொலை செய்த மருத்துவமாணவர்கள் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்: வேலூரில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பெண் குரங்கு ஒன்று கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை நண்பகலில் பெண் குரங்கு ஒன்று அங்கு தங்கியிருக்கும் மருத்துவ மாணவர்களின் அறைக்குள் நுழைந்துள்ளது. அதனை பிடித்து கால்களை கட்டிப்போடி குச்சியாலும், பெல்ட்டாலும் அடித்து கொடூரமாக தாக்கியுள்ளனர் சில மாணவர்கள்.

இதனால் அந்த குரங்கின் கால்களும், எலும்புகளும் உடைந்தன. ஆனாலும் திருப்தியடையாத அந்த மருத்துவ மாணவர்கள் ஒரு இரும்பு கம்பியை அதன் ஆசனவாய் வழியாக செலுத்தி அதனை கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு பரிதாபமாக உயிரிழந்த அந்த குரங்கை எரித்து உடலை மாணவர் விடுதி மெஸ்ஸின் பின்புறம் உள்ள இடத்தில் புதைத்துள்ளனர். சக மாணவர்கள் முன்னிலையில் நடந்த இந்த கொடூர சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியது. இதனிடையே மாணவர்களில் சிலர் விலங்கின ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மருத்துவக் கல்லூரிக்கு விரைந்து சென்ற விலங்குகள் நல ஆர்வலர்கள், ஏலும் பாக்யம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், குரங்கு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து அதனை உடற்கூறு ஆய்வுக்கு உடபடுத்தியதாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக 4 மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சென்னையில் மருத்துவ மாணவர்கள் 2 பேர் நாயை வீட்டு மாடியில் இருந்து தூக்கி எரிந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியிருந்த நிலையில், தற்போது குரங்கை அடித்து கொன்று எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications