மக்கள் குடியரசுத் தலைவர் சமாதியில் தினசரி 10 ஆயிரம் பேர் அஞ்சலி!
மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைந்து ஒரு வாரத்துக்கு மேலானாலும், அவர் மறைவின் தாக்கம் மக்கள் மத்தியில் இன்னும் குறையவில்லை. ராமேஸ்வரத்திலுள்ள அவரது சமாதியில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு மேல் வந்து அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்.
மேகாலயா ஷில்லாங் நகரில் ஜூலை 27ல் உயிரிழந்தார் டாக்டர் அப்துல் கலாம். அவரது உடல் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் தேசிய சாலை அருகே உள்ள பேக்கரும்பு என்னுமிடத்தில் ஜூலை 30 அடக்கம் செய்யப்பட்டது. அப்போது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் திரண்டு வந்த லட்சக்கணக்கான மக்கள் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்றும் கலாம் சமாதிக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அத்துடன் அவர் வாழ்ந்த வீட்டுக்குப் போய் அந்த மாமனிதரின் எளிய வீட்டைப் பார்வையிடுகின்றனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தவறாமல் கலாம் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர். ஒரு நாளைக்கு சாராசரியாக 10 ஆயிரம் பேர் வீதம் இது வரை 2 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
அதுமட்டுமல்ல, தமிழகத்தில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை, சராசரியாக ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பேனர் வைத்து டாக்டர் கலாமுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த பேனர்களை வைத்தது எந்த கட்சியும் அமைப்பும் இல்லை. பொதுமக்கள்தான். ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் அந்தப் பகுதி இளைஞர்கள், கல்வி அமைப்புகள், நிறுவனங்கள் தன்னிச்சையாக நினைவஞ்சலி பேனர்களை வைத்துள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவர் பெருந்தலைவர் காமராஜர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோருக்குப் பிறகு, மக்கள் உண்மையாக அஞ்சலி செலுத்தி வருவது மாமனிதர் டாக்டர் அப்துல் கலாமுக்கு மட்டுமே!












Click it and Unblock the Notifications