சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் சாலையோர உணவகங்களால் விபத்துகள் அதிகரிப்பு
சென்னை: சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் பெருகி வரும் சாலையோர உணவகங்களால், விபத்து எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை 4, சென்னை-பெங்களூர் ஆகிய இரு பெரும் நகரங்களை இணைக்கிறது. இவ்விரு நகரங்கள் நடுவே, ஒசூர், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. எனவே இவ்விரு நகரங்களுக்கு இடையே, பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி, சரக்கு போக்குவரத்தும் அதிக அளவில் நடக்கிறது.

அடிக்கடி விபத்துகள்
குறிப்பாக சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தொட்டுச் செல்லும் காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் முக்கிய சந்திப்புகளான காஞ்சிபுரம், திருப்புட்குழி, பாலுச்செட்டிசத்திரம், பொன்னேரிக்கரை, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட், நசரத்பேட்டை உள்ளிட்ட சந்திப்புப் பகுதிகளில் நாள்தோறும் குறைந்தது 5 விபத்துகள் வரை நடைபெறுவதாக காவல்துறை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கொத்தாக பறிபோகும் உயிர்கள்
இதனால் மாதந்தோறும் குறைந்தது 20க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. சில நேரங்களில் பஸ்கள் விபத்தில் சிக்கும்போது, ஓரே நேரத்தில் பலர் கொத்து கொத்தாக உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

உணவகங்கள் காரணம்
முக்கிய சாலை சந்திப்புப் பகுதிகளில் ஊருக்குள் இருந்து வருபவர்களின் கவனக்குறைவே இதற்கெல்லாம் காரணமாக உள்ளது. இதைவிட முக்கியமாக, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் சாலையோர உணவகங்கள் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாலையில் வாகன நிறுத்தம்
சாலையோரத்தில் உணவகங்கள் அமைப்பவர்கள் சர்வீஸ் ரோடு இல்லாத பகுதிகளில்தான் பெரும்பாலும் கடை அமைத்துள்ளனர். இதனால் இந்தச் சாலையில் செல்லும் சரக்கு வாகனங்களை அவரவர் இஷ்டத்துக்கு சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்று விடுகின்றனர்.

பின்னால் வரும் வாகனங்கள் மோதல்
தேசிய நெடுஞ்சாலையில் வருகிறோம் என்ற எண்ணத்தில், அதிவேகமாக வரும் பிற வாகன ஓட்டுநர்கள் முன்னே நிறுத்தப்பட்டிருக்கும் சரக்கு வாகனங்களின் நிலை குறித்து அறிவதற்கு முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் லாரி உள்ளிட்ட வாகனங்களில் மோதி, பயங்கர விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

மருத்துவ சிகிச்சைக்கு வழியில்லை
அவ்வாறு விபத்து ஏற்பட்டாலும், முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க சென்னைக்கோ, வேலூருக்கோ, பெங்களூருக்கோதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் உயிர் இழப்பைத் தடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது. விலை மதிப்பில்லாத மனித உயிர்களைக் காக்கும் வகையில் சாலையோர உணவகங்களை அகற்ற காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மது விற்பனையுமா..?
ஒரு சில சாலையோர உணவகங்களில் மது விற்பனையும் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனாலேயே சில லாரி ஓட்டுநர்கள் இந்த உணவகங்களில் சாப்பிடுவதற்கு வருவதாகவும் கூறப்படுகிறது. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர உணவகங்களை அகற்றினாலே விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என சமூக ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications