குடிபோதையில் மகளிடம் தகராறு.. மருமகனை அடித்தே கொன்ற மாமியார்.. விருதுநகர் அருகே ஷாக்!
விருதுநகர் அருகே குடிபோதையில் மகளிடம் தகராறு செய்த மருமகனை, மாமியார் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம்: விருதுநகர் அருகே குடிபோதையில் மகளிடம் தகராறு செய்த மருமகனை, மாமியார் உருட்டுக்கட்டையால் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாமியாரைக் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள வேலாயுதபுரத்தை அடுத்த சி.டி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
செல்லப்பாண்டி அதே பகுதியில் உள்ள பால்பண்ணையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
சமபவத்தன்றும் செல்லப்பாண்டி வீட்டிற்கு வழக்கம்போல் மது குடித்து விட்டு வந்துள்ளார். இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இது குறித்து முத்துலட்சுமியின் தாயார் ராஜம்மாள் மருமகன் செல்லப்பாண்டியிடம் கேட்டுள்ளார்.
அப்போது 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜம்மாள் போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த செல்லப்பாண்டியை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு பகுதி போலீசார் வழக்குபதிவு செய்து ராஜம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.