39 வயதில் குடிக்கு அடிமையான 6 குழந்தைகளின் தாய்.. போதை வெறியில் கத்தியால் வெட்டிக் கொண்டு பலி!
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 6 குழந்தைகளுக்குத் தாயான 39 வயதேயான பெண், மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தனக்குத் தானே கத்தியால் வெட்டிக் கொண்டு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மது போதை அடிமைகள் பெருகி வருகின்றனர். ஆண், பெண், இளைஞர், இளம் பெண்கள் என வித்தியாசமே இல்லாமல் குடித்துக் குடித்து சீரழிகிறது சமுதாயம். வரலாறு காணாத அளவுக்கு குடிகாரர்கள் தமிழகத்தில் பெருகிப் போயுள்ளனர்.
இன்னும் கொஞ்ச காலத்தில் குடிக்காத ஆளே இல்லை என்ற அளவுக்கு நிலைமை போய் விடும் போலத் தெரிகிறது. இந்த நிலையில் குடிபோதையில் கணவருடன் ஏற்பட்ட சண்டையில் ஒரு பெண் கத்தியால் தன்னைத் தானே குத்திக் கொண்டு உயிரை விட்டுள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் மைக்கேல் (42). இவரது மனைவி ஏக்கம்மாள் (39). இவர்களுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள் உள்ளனர். அதில், 4 பெண்களுக்குத் திருமணமாகி விட்டது. இரண்டு ஆண் குழந்தைகளும் வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டனர்.
மைக்கேல், ஏக்கம்மாள் இருவரும் குடிக்கு அடிமைகள். தினசரி இரவு சரக்கு அடிக்காமல் தூங்க மாட்டார்களாம். போதையில் இருவருக்கும் இடையே சண்டையும் வருமாம். அந்த சமயத்தில் ஏக்கம்மாள் கத்தியை எடுத்து தனது கையை கீறிக் கொண்டு கணவரை வழிக்குக் கொண்டு வருவாராம்.
நேற்று முன் தினம் இரவும் போதையிலிருந்த மைக்கேலும்-ஏக்கம்மாளும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்ற்றியதால் ஏக்கம்மாள் வழக்கம் போல் தன்னுடைய கையில் கத்தியால் குத்திக் கொண்டார். அப்போது கையிலிருந்த முக்கியமான நரம்பு துண்டாகி அவரது உடலிலிருந்து ரத்தம் முழுவதும் வெளியேறியுள்ளது. ஆனால் குடி வெறியில், போதையில் இருந்த ஏக்கம்மாள் அதை உணரவில்லை.
அப்படியே கீழே சாய்ந்து மயங்கி விட்டார். காலையில் எழுந்து பார்த்த மைக்கேல் தனது மனைவி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியுற்றார். தகவல் கிடைத்து போலீஸார் விரைந்து வந்தனர். உடலை பிரேதப் பரிசோதனைக்குப் போலீஸார் அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications