வெள்ளத்தில் சிக்கிய பிளாட்வாசிகள்.. மனசை பிராண்டி எடுத்த "மவுலிவாக்கம்" நினைவலைகள்!
சென்னை: வெள்ளத்தில் ஊறியதால் கட்டிடங்கள் எந்தளவிற்கு தாங்கும் என்ற அச்சம் சென்னை மக்கள் மத்தியில் உள்ளது.
கடந்தவாரம் தமிழகத்தில் பரவலாக கொட்டித் தீர்த்த பேய்மழையால், சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளை விட்டு வெளியேற முடியாதபடி, வெள்ளநீர் வீடுகளைச் சூழ்ந்தது.
இதனால், மின்சார வசதியும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அதிக பாதிப்பு...
கடந்த முறையை விட இம்முறை அதிக வெள்ளம் ஏற்பட்டதால், மீட்புக் குழுவினரால் உடனடியாக அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அதிகம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

வீட்டைச் சுற்றிலும் வெள்ளம்...
இதனால் மக்கள் வெள்ளம் சூழ்ந்த தங்கள் வீடுகளிலேயே தங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். நீச்சல் தெரிந்தவர்களும் கூட நீர்வரத்து அதிகமாக இருந்ததால், வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை.

மிரட்டிய இரவுகள்...
இதனால் பகல் பொழுதுகளை விட இரவுகள் மிகவும் மிரட்டுவதாக அவர்களுக்கு அமைந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளம். ஆங்காங்கே நாய்களின் அபயக் குரல்களைத் தவிர, மயான அமைதி என்பார்களே அப்படி ஒரு நிசப்தம்.

ஞாபகத்திற்கு வந்த மவுலிவாக்கம்...
இத்தகைய சூழ்நிலையில் தங்கியிருந்த மக்களுக்கு வெள்ளத்தை விட மிரட்டுவதாக, மவுலிவாக்கம் கட்டிட விபத்து ஞாபகத்திற்கு வந்து போனது. தொடரும் கனமழை, வீட்டைச் சுற்றிலும் நீர், தொடர்ந்து நீரில் ஊறுவதால் வீடு தாங்குமா என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது.

மவுலிவாக்கம் கட்டிட விபத்து...
சென்னையின் புறநகர்ப் பகுதியான மவுலிவாக்கத்தில் கடந்தாண்டு ஜூன் மாதம் 11 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நில அமைப்பு...
சரிவர கட்டி முடிக்கப்படாத அந்தக் கட்டிடமானது கனமழையின் காரணமாகவே இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, விதிமுறைகளை மீறி அந்தக் கட்டிடம் கட்டப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது.

கலக்கத்தில் புறநகர் மக்கள்...
இந்த சம்பவத்திற்குப் பின் சென்னைப் புறநகர்களில் வீடு வாங்கிய அனைவருமே கலக்கத்தில் ஆழ்ந்தனர். தங்கள் வீட்டின் உறுதித் தன்மை குறித்த அச்சம் எல்லோர் மனதிலும் ஏற்பட்டது.

நிம்மதியற்ற நிலை...
இந்த சூழ்நிலையில் சென்னையில் பெரும்பாலான அடுக்குமாடி கட்டிடங்கள் தற்போதைய கனமழையால் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இவற்றிற்குள் வசிக்கும் மக்கள் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்த அச்சத்தால் நிம்மதி இழந்து காணப்படுகின்றனர்.

தொடரும் பீதி...
கனமழை தொடரும் என்ற வானிலை அறிவிப்புகளால் இம்மக்கள் மேலும் பீதி அடைந்துள்ளனர். சொந்தவீடு, கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய பொருட்கள் இவற்றை அப்படியே விட்டு விட்டு செல்ல முடியாமலும், அதே சமயம் ஒவ்வொரு நொடியும் மரண பயத்தோடும் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றால் மிகையில்லை.












Click it and Unblock the Notifications