மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடம் தரைமட்டமானது.. காணும் இடமெங்கும் கான்கிரீட் குவியல்கள் #Moulivakkam
மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. கட்டடம் இருந்த பகுதி இப்போது கான்கிரீட் குவியலாக காட்சி அளிக்கிறது.
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 11 மாடி கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. கம்பீரமாகவும், காண்பதற்கு அச்சத்தை ஏற்படுத்திய அந்த கட்டடம் இப்போது கான்கிரீட் குவியலாக காட்சி அளிக்கிறது.
கடந்த 2014 ஜூன் 28ம் தேதி மாலையில் சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 11 மாடிக் கட்டடங்களில் ஒன்று இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 61 பேர் உயிரிழந்தனர். இதன் அருகில் இருந்த மற்றொரு 11 மாடிக் கட்டடமும் பாதுகாப்பற்ற முறையில் இருப்பது தெரியவந்ததால், அதனை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, இந்தக் கட்டடம் பலத்த பாதுகாப்புடன் இன்று பிற்பகலில் இடிக்கப்படுகிறது. கட்டடம் அதே இடத்தில் உள்நோக்கி விழும் வகையில், வெடிமருந்துகள் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் இடிக்கப்படவுள்ளது.
இதற்காக கட்டடத்தின் உள்ளே 150 இடங்களில் தூண்களில் துளையிடப்பட்டு 75 கிலோ அளவிற்கு வெடி பொருட்கள் நிரப்பப்பட்டுள்ளன. வெடிமருந்துகள் ஒன்றுடன் ஒன்றாக வயர்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ரிமோட்கள் மூலம் வெடிபொருட்களை வெடிக்கச் செய்தனர். முதலில் தரை தளத்தில் தொடங்கி 5 வது தளம் வரை நிரப்பப்பட்ட வெடி பொருட்கள் வெடித்து கட்டடம் தரை மட்டமானது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மவுலிவாக்கம் பகுதி பள்ளிகளுக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது. கட்டடத்தின் அருகே இருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
11 மாடி கட்டடத்தின் அருகில் முன்னெச்சரிக்கையாக 10 தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தவைக்கப்பட்டன. இதற்காக மவுலிவாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று நண்பகல் 12 மணி முதல் கட்டடத்தை இடித்து முடிக்கும் வரை மின்தடை அறிக்கப்பட்டது.
கட்டடம் 3.30 மணியளவில் இடித்து தரைமட்டமாக்கப்படும் என்றும், இடிபாடுகள் உள் நோக்கியே விழும் என்பதால் அருகில் உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பு வர வாய்ப்பு இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இடி மின்னலுடன் கனமழை பெய்வதால் கட்டடம் தரைமட்டமாகும் பணிகள் சில மணிநேரங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
கட்டடத்தை சுற்றியும் 200 மீட்டர் தொலைவிற்கு ஆபத்தான பகுதி என்று அறிவிக்கப்பட்டது. 11 மாடிக் கட்டடம் 3 நொடிகளில் தரைமட்டமானது. அப்போது மிகப்பெரிய அளவில் புகை மண்டலம் எழுந்தது.
போரூர்-குன்றத்தூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் 11 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமாகி வெறும் கான்கிரீட் குவியலானது.












Click it and Unblock the Notifications