1,2,3.. இந்த மூன்று முடிவுகளை பாஜக எடுத்திருக்க கூடாது.. லிஸ்ட் போட்டு குறை சொன்ன கார்த்தி சிதம்பரம்
பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசு என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்
சிதம்பரம்: பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமே மத்திய அரசுதான் என்று எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் நிலவி வரும் நீட்தேர்வு, ஒன்றியம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டன.
அதற்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை பல வகைகளில் குற்றஞ்சாட்டினார்.

கொங்கு நாடு
அவர் சொன்னதாவது: "கொங்கு நாடு பிரித்து தரும்படி இப்போ யாரு கோரிக்கை வெச்சது? யாருமே எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அதனை காங்கிரஸ் கட்சியும் ஆதரிக்காது. இதனை டிரையல் பலூனாக வேறு ஏதோ காரணத்துக்காக விடுகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை நீட் என்பது தேவையில்லாதது.. ஆனால் சட்டரீதியாக அதனை சந்திக்க வேண்டிய எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தமிழ்நாடு இன்று உள்ளது... இது இப்போது முடியாவிட்டாலும், அடுத்த வருடம் கண்டிப்பாக தமிழக அரசின் முயற்சி வெற்றி பெறும்.

ஒன்றியம்
யூனியன், ஒன்றிய அரசு என்று அழைப்பதை தவறு என்கிறார்கள்... அப்படி சொல்பவர்கள் எல்லாம் இங்கிலீஷ் தெரியாதவர்களாக உள்ளனர்... யூனியன் பட்ஜெட் அதாவது ஒன்றிய பட்ஜெட் என்ற பெயரிலேயே பட்ஜெட் போடப்படுகிறது. அதேபோல யூனியன் மினிஸ்டர்தான். அப்படித்தான் இங்கிலீஷில் அழைக்கிறோம். ஆகவே ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை.

3 விஷயங்கள்
இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம்.. குறிப்பாக 3 தவறான முடிவுகளை எடுத்துவிட்டது.. ஒன்று, திடீர் பண மதிப்பிழப்பு, இரண்டாவது குழப்பமான ஜிஎஸ்டி, மூன்றாவது, முன்னறிவிப்பில்லாத ஊரடங்கு போன்றவைகளால்தான் அனைத்து தொழில்களும் முடங்கின.. தொழில்கள் மூலம் வரி வருவாய் வராத காரணத்தால் 130 கோடி மக்களிடம் வரி விதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் வரியை விதித்துள்ளது.

மோடி
அந்த காலத்திலிருந்து கட்சிக்காக போராடியவர்களை ஓரம் கட்டிவிட்டு தனக்கு விசுவாசமானவர்களுக்கு மட்டுமே மோடி இந்த முறை அமைச்சர் பதவி வழங்கி இருக்கிறார்.. தேசிய கட்சிக்கு மாநிலத்துக்கு மாநிலம் கருத்துக்கள் மாறுபடும்.. அதிமுகவை பொறுத்தவரை, இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட முடியாது.. தற்போது நடக்கும் சூழல்களை வைத்து பார்த்தால், அதிமுக விரைவில் சசிகலா தலைமையின் கீழ் இயங்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications