அண்ணா சாலையை அலறடித்த விபத்து.. 8 பேரை காயப்படுத்திய அரசு பஸ்.. பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!
சென்னை அண்ணாசாலையில் மாநகர பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
சென்னை : எப்போதும் வாகன நெரிசலுடன் இருக்கும் அண்ணா சாலையில் இன்று காலையில் மாநகர பேருந்து மோதி ஏற்பட்ட விபத்து பயணிகளை அலறவிட்டது.
சென்னை அண்ணா சாலை தலைநகரின் முக்கிய சாலையான இங்கு எப்போதும் வாகனங்கள் பறந்து சென்று நகரத்து மக்களின் பரபரப்பு வாழ்க்கையை பிரதிபலிக்கும். மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அண்ணா சாலையில் ஆங்காங்கே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனினும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டிகள் அடித்து பிடித்து செல்வதை மட்டும் மாற்றிக் கொள்ளவேயில்லை.
ஸ்பென்சர் பிளாசா அருகே சைதாப்போட்டையில் இருந்து பிராட்வே சென்ற தடம் எண் 18 K மாநகரப் பேருந்து வேகமாக வந்துள்ளது. அப்போது இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை ஓட்டுநர் சாலையோரம் திருப்பியுள்ளார், இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறு மாறாக ஓடி சாலையோரம் இருந்த இரும்புத் தூணில் மோதியது.
சாலையில் விழுந்த பேனர்கள்
அந்த இரும்புத்தூண் ராட்சத வழிகாட்டி பேனர்களைத் தாங்கி நின்றது. பேருந்து மோதிய வேகத்தில் பெயர்ப்பலகைகள் உடைந்து சாலையின் நடுவில் விழுந்தது. காலை நேரத்தில் அலுவலகம் செல்லும் பெண்கள் பயணித்த பேருந்து படுபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அலறிய பயணிகள்
இரும்புத் தூணில் மோதிய பேருந்தை ஓட்டுநர் சாமர்த்தியமாக பின்னுக்குத் தள்ளினர். பேருந்து மோதிய வேகத்தில் அதிர்ச்சியடைந்த பயணிகள் அபாய கூக்குரலிட்டனர்.
மீட்புப் பணிகள்
இதனையடுத்து அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் ஓடி வந்து பயணிகளை மீட்டனர். உடனடியாக அந்த இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
விபத்தில் படுகாயமடைந்த 6 பெண்கள் உள்பட 8 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாநகரப் பேருந்தின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், அதனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து விபத்தால் அண்ணாசாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.