அலங்காநல்லூரில் என்னை பலி கொடுக்க போலீஸ் திட்டமிட்டு கொடூரமாக தாக்கியது- முகிலன் பகீர் தகவல்
அலங்காநல்லூர் போராட்ட களத்தில் என்னை உயிர் பலி கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டே போலீசார் தாக்கினர் என குற்றம்சாட்டியுள்ளார் முகிலன்.
ஈரோடு: அலங்காநல்லூரில் தம்மை உயிர்பலி கொடுக்க வேண்டும் என்று போலீசார் திட்டமிட்டு கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தினர் என சமூக செயற்பாட்டாளர் முகிலன் குற்றம்சாட்டியுள்ளார்.
அலங்காநல்லூர் போராட்ட களத்தில் அந்த மக்களுக்கு துணை நின்ற முகிலனை குறி வைத்து போலீசார் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக முகிலன் அளித்த பேட்டி:
அலங்காநல்லூரில் நூற்றுக்கணக்கான போலீசார் சீருடை இல்லாமல் போராட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டனர். ஆனால் அவர்களை நாங்கள் நன்றாகவே அடையாளம் கண்டுகொண்டோம்.
சிதைக்க சதி
அவர்களது நோக்கமே போராட்டத்தை சிதைக்க வேண்டும்; நெருக்கடி தர வேண்டும் என்பது மட்டுமே. நாங்கள் அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்கொள்ளும் நிலையில்தான் இருந்தோம்.
வன்முறைதான் திட்டம்
போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மனநிலையில் போலீஸ் இல்லை. அவர்களது நோக்கமே அடித்து வன்முறையை ஏற்படுத்துவது என்பது மட்டுமாகவே இருந்தது.
30 போலீசார் தாக்குதல்
அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய என்னை காவல்துறை முதலில் கைது செய்து வைத்திருந்தது. பின்னர் கலவரம் முடிந்த நிலையில் 30 போலீசார் சுற்றி வளைத்து என்னை தாக்கினர்.
இன்ஸ்பெக்டர் அன்னராஜூ
அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் அன்னராஜூ என்னுடைய தலையை குறிவைத்து, நீ இனிமேல் மதுரை மாவட்டத்துக்குள் வரவே கூடாது; அலங்காநல்லூரே உன்னால்தான் கெட்டுப் போச்சு; முதல்வரே சொன்னாலும் கேட்கமாட்டியா? என கூறிக் கொண்டே அடிக்க முயற்சித்தார்.
சரமாரி அடி
நான் தலையில் அடிவிழாதவாறு தடுத்தேன். இதனால் கைகள், கால்களில் போலீசாரின் அடி விழுந்தது. என் கழுத்து, முதுகிலும் சராமரியாக அடித்தனர்.
உயிர் பலி
இப்போராட்டத்தில் என்னை உயிர் பலி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆள் அரவமற்ற இடத்தில் வைத்து போலீசார் என்னை தாக்கினர். அவினாசி- அத்திக்கடவு, கூடங்குளம் அணு உலை, ஜல்லிக்கட்டு போன்றவைகளுக்காக தொடர்ந்து நான் போராட்டங்களில் கலந்து கொண்டதால் என்னை குறிவைத்து போலீசார் திட்டமிட்டு தாக்கினர்.
இவ்வாறு முகிலன் கூறியுள்ளார்.