முல்லை பெரியாறு அணை: வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு - ஞானதேசிகன்
சென்னை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
"இந்த தீர்ப்பு தமிழக மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி ஆக உயர்த்தலாம் என்றும், அணையின் பராமரிப்பை கேரள அரசுதான் மேற்கொள்ளும் என்று அம்மாநில சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை செல்லாது என்றும், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பை இரு மாநில மக்களும் வெற்றி - தோல்வி ஆக கருதாமல் சுமூகமாக பரஸ்பர ஒத்துழைப் போடு கொண்டு செல்ல வேண்டும். இந்த வழக்கை சிறந்த முறையில் நடத்தியதற்காக தமிழக அரசுக்கும், வக்கீல்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
தனிப்பட்ட முறையில் இந்த தீர்ப்பின் மூலம் எனக்கொரு மகிழ்ச்சி உண்டு. ஏனெனில், முதன் முதலில் முல்லை பெரியாறு அணை வழக்கை அப்போதைய தேனி எம்.எல்.ஏ அழகர்ராஜா சார்பில் நான்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
கேரள மக்கள் இந்த தீர்ப்பால் தோல்வி மனப்பான்மைக்கு ஆளாகாமல் வழி நடத்த வேண்டிய பொறுப்பு கேரள மாநில அரசுக்கு உள்ளது''என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.