ஸ்டாலின் அழைப்பு.. மீண்டும் திமுகவில் இணைகிறார் முல்லைவேந்தன்?
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்ததன் பேரில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மீண்டும் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவின் தருமபுரி மாவட்ட செயலாளராக இருந்தவர் முல்லைவேந்தன். இவர் முன்னாள் அமைச்சராவார். கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கட்சியின் வெற்றிக்கு துணை நிற்காமல் இருந்ததாக முல்லை வேந்தன், பழனிமாணிக்கம், இன்பசேகர் ஆகியோருக்கு பேராசிரியர் க.அன்பழகன் சஸ்பெண்ட் செய்து நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து பழனிமாணிக்கமும் இன்பசேகரனும் விளக்கம் கொடுத்து விட்ட நிலையில் அவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை அதே ஆண்டில் ஜூலை 19-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. எனினும் முல்லைவேந்தன் எவ்வித விளக்கமும் கொடுக்காததால் அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
பின்னர் 2015-ஆம் ஆண்டு தேமுதிகவில் இணைந்து பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். எனினும் தேமுதிகவிலும் அதிக நாட்டம் இல்லாமல் இருந்தார். இந்நிலையில் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை இரு முறை சென்று பார்த்துவிட்டு வந்தார் முல்லை வேந்தன். இதைத் தொடர்ந்து கருணாநிதி மறைந்தவுடன் கோபாலபுரம் இல்லத்திலும் ராஜாஜி அரங்கிலும் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மூலம் முல்லைவேந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை ஏற்று முல்லைவேந்தன் திமுகவில் இணைய முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நாளை அவர் சென்னை வரவுள்ளதாக தெரிகிறது.