பாதி பயணம் முடிஞ்சு போச்சு.. சொல்கிறார் ப.சிதம்பரம்
காரைக்குடி: காங்கிரஸ் கட்சியில் பெரும்பகுதி பயணத்தை நான் முடித்துவிட்டேன். என பயணம் ஒரு சில ஆண்டுகளில் முடிந்துவிடும் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
காரைக்குடியில் நடந்த சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு ப.சிதம்பரம் பேசியபோது இவ்வாறு கூறினார்.

ப.சிதம்பரம் பேசுகையில்,
காங்கிரஸ் கட்சியில் பெரும்பகுதி பயணத்தை நான் முடித்துவிட்டேன். என பயணம் ஒரு சில ஆண்டுகளில் முடிந்துவிடும்.
வருகிற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்று நம்ப முடியாது. அதற்குள் கட்சி வலுப்படாது. இதற்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல்களில் நம் கட்சியினர் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் முன்பு கிராம, வட்டார கமிட்டிகள் இருந்தன. தற்போது அது இருக்கிறதா? என்று தெரியவில்லை. 15 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சி செய்த டெல்லியிலும் அது இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் காங்கிரஸ் கட்சி அரசியல் கட்சியாக செயல்பட முடியாது.
இதற்காகத்தான் தமிழகத்தில் முன்னோடியாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 627 ஊராட்சிகளிலும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி நான் எதிர்பார்த்ததுதான். இதற்கு காரணம் 80 சதவீத மக்கள் காசு வாங்கி ஓட்டளித்ததுதான்.
இந்த கறை இளைஞர்கள் காலத்திலாவது திருத்தப்பட வேண்டும். இந்த கறை விழுந்ததற்காக நான் கண்ணீர் வடிக்காதே நாளே கிடையாது.
நாட்டை வழி நடத்துபவர்கள், எளிமையாக இருக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி தினமும் 5 முறை உடை மாற்றுகிறார். காங்கிரஸ் இல்லாத ஆட்சியை உருவாக்குவோம் என பா.ஜ.க. கூறுகிறது. ஆனால் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை யாராலும் உருவாக்க முடியாது என்றார் அவர்..












Click it and Unblock the Notifications