தொண்டை பழுதானாலும் தொண்டு பழுதாகாது… பிரச்சாரத்தில் வைகோ
சாத்தூர்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் அவரால் தேர்தல் பிரச்சாரத்தில் சரியாக பேசமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பிரச்சாரத்தை ரத்து செய்யாமல் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
லோக்சபா தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வைகோ, கடந்த ஒருவாரகாலமாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் வைகோ, திருப்பரங்குன்றம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சாத்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
சனிக்கிழமையன்று, என்.சுப்பையாபுரத்தில் தொடங்கிய அவர், கரிசல்பட்டி, ரெட்டியபட்டி, ஏழாயிரம் பண்ணை, வெற்றிலையூரணி, கீழத்தாயில்பட்டி, தாயில்பட்டி என 23 ஊர்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வைகோ செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவரது தொண்டையில் லேசான தொற்று ஏற்பட்டுள்ளதால் சரிவர பேச முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் கூடியிருந்த மக்கள் முன்பு பேசிய வைகோ, எனது தொண்டை பழுதானாலும் தொண்டு பழுதாகாது என்றார்.

வஞ்சிக்கப்பட்ட தமிழகம்
தொடர்ந்து பேசிய அவர், கடந்த பத்து ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் தமிழகம் பெரிதும் வஞ்சிக்கப்பட்டது.

பனை மரம் போல பயன்படுவேன்
பனை மரம் பயன்படுவது போல் எனக்கு வாய்ப்பதால் நான் தமிழகத்திற்கு பயன்படுவேன். முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் போராட்டத்தில் மதிமுக தனது கடுமையான பங்களிப்பபை தந்திருக்கிறது.

துரோகம் செய்த காங்கிரஸ்
மத்திய காங்கிரஸ் முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளது. இந்த தேர்தலில் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியை தூக்கியெறிந்து நரேந்திர மோடியின் ஆட்சியை கொண்டுவருவோம்.

மலரப் போவது மோடி ஆட்சி
இந்தியாவில் மலரப்போவது மோடி தலைமையிலான ஆட்சி தான். ஆகையால் மோடி தலைமையிலான எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என வைகோ கேட்டுக்கொண்டார்.

இன்றைய பிரசாரம்
இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை வைகோ, சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆசிலாபுரம், சோழபுரம், முதுகுடி, எஸ்.ராமலிங்கபுரம், சங்கரலிங்கபுரம், வா.உ.சி நகர் உள்ளிட்ட 26 இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.












Click it and Unblock the Notifications