இஷ்ரத் என்கவுண்ட்டர் விவகாரத்தில் போலியான சர்ச்சையை உருவாக்குகிறது மத்திய அரசு- ப.சிதம்பரம்
சென்னை: இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் விவகாரத்தில் பிரமாணப் பத்திரங்களை முன்வைத்து போலியான ஒரு சர்ச்சையை உருவாக்குகிறது மத்திய அரசு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே கடந்த 2004-ம் ஆண்டு இஷ்ரத் ஜஹான் என்ற 19 வயது இளம்பெண். குஜராத் கிரைம் பிராஞ்ச் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய நண்பர் பிரனேஷ் பிள்ளை என்ற ஜாவீது ஷேக், பாகிஸ்தானியர் என சந்தேகிக்கப்படும் அம்ஜத் அலி ராணா, ஜீஷன் ஜோகர் ஆகியோரும் என்கவுண்ட்டர் மூலம் கொல்லப்பட்டனர்.
அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல வந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள்தான் இவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இது போலி என்கவுண்ட்டர் என்றும், அப்பாவியான அவர்களை போலீசார் பிடித்து வைத்து திட்டமிட்டு சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

விசாரணை அறிக்கை தாக்கல்
இந்த வழக்கில் என்கவுண்ட்டர் தொடர்பான கோப்புகள் மாயமானதாகவும் சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து கோப்புகள் மாயமானது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்பேரில் கூடுதல் செயலாளர் பி.கே.பிரசாத் தலைமையிலான ஒரு நபர் குழு விசாரணை மேற்கொண்டது. அக்குழு நேற்று அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்தது.

ஆவணங்கள் மாயம்
அதில், 2009-ம் ஆண்டு 5 முக்கிய ஆவணங்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். ஆனால் விசாரணை அறிக்கையில் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை.

முதல் பிரமாண பத்திரம்
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ப.சிதம்பரம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இஷ்ரத் ஜஹான் வழக்கில் 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ந் தேதி முதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அது மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு உளவுத்துறை தந்த தகவல்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டது.

கூடுதல் பிரமாண பத்திரம் ஏன்?
2009-ம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதியன்று நீதிபதி எஸ்.பி. தமாங் தம்முடைய அறிக்கையில், இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 பேர் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறியிருந்தார். இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. முதல் பிரமாணப் பத்திரமானது என்கவுண்ட்டரை நியாயப்படுத்தும் வகையில் தவறாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஆகையால் முதலாவது பிராமணப் பத்திரம் தொடர்பாக விளக்கம் தர வேண்டிய தேவை இருந்தது. இதைத் தொடர்ந்தே கூடுதல் பிரமாணப் பத்திரம் 2009-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் உளவுத்துறை தந்த தகவல்களுக்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை; உளவுத்துறை தகவலின்படி மாநில அரசும் மாநில போலீசாரும்தான் செயல்பட்டிருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எது மையப் பிரச்சனை?
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசு வெளிப்படையாகத்தான் செயல்பட்டது. கூடுதல் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் அட்டர்னி ஜெனரல் அதை ஆய்வு செய்தார். இஷ்ரத் ஜஹான் வழக்கில் சரியான தகவல்களைக் கொண்ட கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதற்கு நானே பொறுப்பு.
இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 பேர் உண்மையான என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனரா? அல்லது போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனரா? என்பதுதான் மையப் பிரச்சனை.

போலியான சர்ச்சை...
அது வழக்கு விசாரணையின் முடிவில் தெரியவரும். இந்த நிலையில் பிரமாணப் பத்திரங்களை முன்வைத்து ஒரு போலியான சர்ச்சையை மத்திய அரசு உருவாக்குகிறது. மாயமான 5 ஆவணங்களும் எங்களது நிலைப்பாட்டை நிரூபிக்கக் கூடியவைதான்.
இவ்வாறு ப. சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications