உடல்நலம் தேறிய ஜெ. உயிரை பறித்த அந்த 'பழச்சாறு'... வெளிவராத அப்பல்லோ ரகசியம்!
உடல்நலம் தேறிய நிலையில் ஜெயலலிதாவின் உயிரை பறித்ததே அந்த 'பழச்சாறு'தான் என புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலம் தேறிவந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட 'பழச்சாறு'தான் அவரது உயிரை பறித்ததாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் மர்ம மரணத்தின் முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப்படாமலேயே உள்ளன. ஓபிஎஸ் அதிமுக, திமுக உள்ளிட்டவை ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரிய கோஷம் ஆர்கே நகர் தேர்தல் ரத்தோடு முடிந்துபோய்விட்டது.
ஜெயலலிதாவின் நினைவிடமும் அவர் வசித்த போயஸ் கார்டன் பங்களாவும் ஏதோ ராசியில்லாத இடம்போல கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மைகளைத் தெரிந்தவர்கள் எவரும் இதுதான் நடந்தது என பட்டவர்த்தனமாக இன்னமும் கூறவில்லை.
விஜயபாஸ்கருக்கு குறி
அதேநேரத்தில் டெல்லியோ, ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது சசிகலாவின் அடியாள் போல வலம் வந்த அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைத்து இப்போது வருமான வரித்துறை மூலம் வளைத்துக் கொண்டிருக்கிறது. விஜயபாஸ்கரை மீண்டும் வருமான வரித்துறை விசாரணைக்கு அழைத்தும் உள்ளது.
பாலாஜி விவகாரம்
மேலும் விஜயபாஸ்கர் விவகாரத்தை கிளறியபோது அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது நடந்த கூத்துகளும் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன. ஆனால் ஜெயலலிதா கைரேகையைப் பதிவு செய்த மருத்துவர் பாலாஜியோ இதை நிராகரித்துள்ளார்.
ஜெ.வுக்கு கொடுத்த பழச்சாறு
தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா நல்ல உடல்நலம் தேறி வந்து கொண்டிருந்தாராம். அப்போது மருத்துவர்கள் அனுமதியின்றி வழக்கமாக ஜெயலலிதா அருந்தும் 'பழச்சாறு' கொடுக்கப்பட்டிருக்கிறது.
அடம்பிடித்து கொடுத்ததால் விபரீதம்
இந்த 'பழச்சாறை' கொடுக்கக் கூடாது என நர்சுகள் கண்டித்தும் அதைக் கண்டுகொள்ளாமலேயே வழக்கமாக சாப்பிடுவதுதானே என கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இதுதான் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட காரணமாம்... அந்த பழச்சாறு மட்டும் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்படாமல் இருந்தால் எந்த சிக்கலும் இருந்திருக்காது என அப்போதே மருத்துவர்கள் கூறியிருந்தனராம். இந்த தகவல் இப்போது பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.