ரூ. 1.10 கோடி வெள்ளநிவாரணம் கொடுத்த நடிகர் சங்கம்: கட்டிட பூமி பூஜை விழாவிற்கு வர சம்மதம் சொன்ன ஜெ.
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட துவக்க விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதா சம்மதம் தெரிவித்ததாக நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் 17 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று முதல்வரிடம் அளிக்கப்பட்டது.
அந்த வரிசையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.
1. ஐசிஐசிஐ வங்கியின் முதுநிலை பொது மேலாளர் மற்றும் தென் இந்திய வணிகத் தலைவர் அமித் பால்டா 10 கோடி ரூபாய்.
2. அசோக் லேலாண்ட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வினோத் தாசரி 3 கோடி ரூபாய்.
3. அமால்கமேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஏ. கிருஷ்ணமூர்த்தி 2 கோடி ரூபாய்.
4. ஃபோர்டு மோட்டார் பிரைவேட் லிமிடெட்நிறுவனத்தின் இயக்குநர் ஆர். ஸ்ரீகாந்த் 1 கோடி ரூபாய்.
5. தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எம். நாசர் 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் 17 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று திங்கட்கிழமை முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எம். நாசர் ரூ.1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் முதல்வரிடம் வழங்கினார்.
முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவர் கருணாஸ் கூறும்போது, "தென்னிந்திய நடிகர் சார்பில் வெள்ள நிவாரண நிதியாக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் முதல்வரிடம் நிதியளித்தோம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்வரிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தோம்.
அதே கோரிக்கையை இந்த முறை தலைவர் நாசரும், பொது செயலாளர் விஷாலும் கேட்டார்கள். முதல்வரும் நிச்சயமாக பூமி பூஜையில் வந்து கலந்து கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியுள்ளார் கருணாஸ்.
தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக பல்வேறு நிறுவனங்களும், தனி நபர்களும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.303 கோடியே 90 லட்சத்து 98 ஆயிரத்து 948 வழங்கியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.