நாகர்கோவிலில் பெண் மர்ம மரணம் - கிட்னி திருட்டு முயற்சியா? உறவினர்கள் முற்றுகை!
நாகர்கோவில்: மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம்பெண் மர்மமாக இறந்ததால் உறவினர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
அருமனை செறியகொல்லை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவர் குழித்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை கூட ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இரவு பணி முடிந்து காலையில் வீட்டிக்கு புறப்பட முயன்ற போது அவர் திடீரென மயக்கமடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அப்போது மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள், ஸ்ரீஜா மயக்கடைந்து விழுந்ததாகவும், ஸ்கேன் செய்து பார்த்த போது சிறிய ஆபரேசன் தேவைப்படுவதாகவும் கூறி அவரது பெற்றோரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். பின்னர் அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறி வேறு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
ஆனால் அந்த மருத்துவமனையிலோ ஸ்ரீஜா இறந்து 1 மணி நேரம் ஆவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக களியாக்கவிளை போலீசில் புகார் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் ஸ்ரீஜாவின் உடல் காரக்கோணம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர்.
சாதாரண மயக்கத்திற்கு ஆபரேசன் செய்யப்பட்டது ஏன்? அவரது உடலில் இருந்து கிட்னியை திருட முயற்சித்த போதுதான் அவர் இறந்தாரா? என்று சந்தேகப்படுவதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அத்துடன் ஸ்ரீஜா பணிபுரிந்த மருத்துவமனையையும் அவர்கள் முற்றுகையிட்டனர்.
இதையடுத்து பிரேத பரிசோதனை அடிப்படையில சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதன் பிறகு அவரது உடலை உறவினர்கள் பெற்று சென்றனர். கிட்னி திருட முயன்ற போது இளம்பெண் இறந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.