திருட்டு மது விற்ற வாலிபருக்கு சராமரி அடி உதை... நாகர்கோவில் அருகே பரபரப்பு
நாகர்கோவில்: திருட்டுத்தனமாக மதுபாட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞர் தாக்கப் பட்டது தொடர்பாக நாகர்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் அருகே ஆரல்வாய்மொழி பகுதியில் திருட்டித்தனமாக மது பாட்டில்கள் மற்றும் போதை பொருள்கள் விற்கப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் உரிமம் இல்லாமல் மது விற்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து ராமச்சந்திரனைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், தன்னை போலீசில் சிக்க வைத்தது அதே பகுதியை சேர்ந்த அருள், ஜோசப், சுரேஷ், அண்ணாத்துரை ஆகியோர் என கருதினார். எனவே, அவர்களுடன் ராமச்சந்திரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த நான்கு பேரும் சேர்ந்து ராமச்சந்திரனை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் 4 இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருட்டு தனமாக மது விற்பனை செய்த ராமசந்திரனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications