சென்னையில் நளினி சிதம்பரம் வீடு முற்றுகை... தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் போராட்டம்!
நீட் தேர்வில் விலக்கு அளிக்கக் கூடாது என்று வாதாடிய வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தின் வீட்டை தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : சென்னையில் நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டு தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கூடாது என்று சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் வழக்கறிஞராக நளினி சிதம்பரம் வாதாடினார்.
இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி மனு போட்டு டெல்லி சென்று போராடியவர் தான் மாணவி அனிதா. நீட் தேர்வில் விலக்கு கிடையாது என்பதால் மருத்துவ கனவு தொலைந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார் அனிதா.

முற்றுகையிட முயற்சி
அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டு தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இயலாமல் நடந்த தற்கொலை இல்லை
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராஜசேகர் கூறியதாவது : அனிதாவின் இழப்பு வாய்ப்பு கிடைக்காத மாணவி இயலாமையால் செய்து கொண்ட தற்கொலை இல்லை. அகில இந்திய அளவில் நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன
நீட் தேர்வை 15 சதவீதம் மாணவர்கள் கூட தேர்ச்சி பெறாத நிலையில் தான் உள்ளனர். நிலையான கல்வித்தரம் இல்லாத நிலையில் நீட் தேர்வை அனுமதித்தது தவறு. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயில்பவர்களுக்கு இல்லை. அதிலும் நகர்ப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அந்த பெண்ணின் எத்தனை வருட கனவாக இது இருந்திருக்கும்.

பயிற்சி அளிப்போம்
நீட் தேர்விற்கு விலக்கு இப்போது கிடைத்து விடும் என்று சொல்லியே வந்த அரசு இறுதியில் கைவிட்டது தாங்க முடியாமலேயே அனிதாஅ தற்கொலை செய்து கொண்டுள்ளார். இனி வரும் காலத்தில் நீட்டிற்காக அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம்.
மனம் தளராதீர்கள்
நீட் தேர்வில் தோல்வியடைந்தால் மனம் தளராதீர்கள், மேலும் 2 வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு பயிற்சி தர. நிச்சயமாக இந்தியாவிற்கே சவால் விடும் மாணவர்களாக நீங்கள் மாற முடியும் மனம் தளராதீர்கள் இது இறந்த எனது தங்கை அனிதாவின் மீது சத்தியம், என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications