ரோடு ஆர்டர் போட்டவங்க இங்க வந்தா... அவங்கள கடிச்சு தின்னுடுவேன்.. அருள் வந்த பெண் ஆவேசம்!
நிலத்தை அளக்க வந்த அதிகாரிகள் முன்னிலையில் பெண் ஒருவர் சாமியாடினார்.
Recommended Video
பெரணமல்லூர்: 8 வழிச்சாலைக்கு நிலத்தை அளக்க வந்த அதிகாரிகள் முன்னிலையில் பெண் ஒருவர் சாமியாடியதுடன், அதிகாரிகள் கையில் வைத்திருந்த கருவிகளையெல்லாம் பிடுங்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களும் பதற்றத்தின் உச்சியில் உள்ளன. தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் அவர்களின் எதிர்ப்புகளையும் மீறி அதிகாரிகள் விவசாய நிலங்கள் அளவீடு மற்றும் கற்களை நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி பெரணமல்லூர் அருகே அரியப்பாடியிலும் அதிகாரிகள் நிலத்தை அளவிட வந்தனர். அதிகாரிகளுடன் போலீசாரும் உடன் வந்தனர். அதிகாரிகளை கண்டதும் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். இளைஞர்களும் அதிகாரிகளை நோக்கி திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனையும் மீறி அதிகாரிகள் ஒரு விவசாயியின் நிலத்தில் கற்களை நட முயற்சித்தனர்.
அதனை கண்ட உரிமையாளரான விவசாயி மனைவி செந்தாமரை என்பவர் திடீரென ஆவேசமடைந்தார். அதிகாரிகள் முன்னிலையில் தலைமுடியை விரித்து, சாமியாட தொடங்கினார். "ஆர்டர் போட்டவங்க மட்டும் இங்க வந்தா... அவங்கள கடிச்சு தின்னுடுவேன்" என்று பற்களை கடித்தபடியே பேசினார். அதிகாரிகள் நிலத்தை அளக்க வைத்திருந்த கருவிகளை பிடுங்கி தூற எறிந்தும், தரையில் படுத்து உருண்டார்.
பெண்ணின் செயலை கண்ட அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். நிலம் அளக்கும் வேலையை விட்டுவிட்டு அந்த பெண் சாமியாடுவதையே பார்த்தபடி நின்றனர். அந்த நேரத்தில் அங்கு திரண்ட அப்பகுதி இளைஞர்கள், விவசாயிகள் நட்டு வைத்த கற்களை பிடுங்கியெறிய தொடங்கினர். இதனை கண்டித்த அதிகாரிகள் மீண்டும் தங்களது பணியினை தொடர ஆரம்பித்தனர்.
'8 வழி சாலை அமைத்தால் இந்த அரசு காணாமல் போய் விடும்' என்று சேலம் குள்ளம்பட்டி கிராமத்தில் பெண் ஒருவர் இதேமாதிரி சாமியாடியது குறிப்பிடத்தக்கது.